இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அறிவிப்பு!

இலங்கையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள இலங்கையில், கடும் வன்முறை வெடித்துள்ளது. பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக மகிந்த ராஜபக்சே அறிவித்த சில மணி நேரங்களில் ராஜபக்சே ஆதரவரவாளர்களுக்கும் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் இடையே வெடித்த மோதல், நாடு முழுவதும் பரவியுள்ளது. வன்முறையில் சிக்கி உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

பிரதமர் பதவியை ராஜினாமா செய்து விட்டு மகிந்த ராஜபக்சே தலைமறைவானதையடுத்து, அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சிகளில் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஈடுபட்டு வந்த நிலையில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் சேர்ந்து 15 பேர் கொண்ட அமைச்சரவையும் பொறுப்பேற்கும் என கூறப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 4 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். ஆனாலும், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது. அதனை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. மேலும், ராகபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே வன்முறைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

முன்னதாக, வன்முறைகளை கட்டுப்படுத்த கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவி விரிவுபடுத்தப்பட்டது. மேலும், ஊரடங்கு உத்தரவானது அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனிடையே, புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நாடு முழுவதுமான ஊரடங்கு தளர்த்தப்படுவதாகவும், இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதாகவும் இலங்கை அரசு அறிவித்தது.

இந்த நிலையில், இன்று இரவு 8 மணி முதல் நாளை காலை 7 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அரசின் இந்த திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலை குறித்து பிரதமர் ரனில் விக்ரமசிங்கே இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

என்னிடம் கைப்பிடி இல்லை, என் கால்களில் கழற்ற முடியாத காலணிகளை அணிந்துள்ளேன். நான் பொறுப்பேற்றது கத்தியின் மேல் நடப்பதைவிட பயங்கரமான சவால். மெல்லிய கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ள பாலத்தின் மீது நடக்க வேண்டி உள்ளது நமது கையிருப்பில் ஒரு நாளைக்குத் தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இந்திய கடன் உதவியின் கீழ் மே 19, ஜூன் 1 ஆகிய தேதிகளில் 2 டீசல் கப்பல்களும், மே 18, மே 29 ஆகிய தேதிகளில் 2 பெட்ரோல் கப்பல்களும் வரவுள்ளன. இலங்கையின் பொருளாதார நிலையை சீர்செய்ய சுமார் 75 மில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.