அருணாச்சல பிரதேசம் அருகே சீன கட்டுமான பணி தீவிரம்!

நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் சர்வதேச எல்லை அருகே, சீனா கட்டுமானப் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேசத்தின் பல பகுதிகளை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், இந்திய ராணுவ கிழக்கு படை தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஆர்.பி. கலிதா கூறியதாவது:-

அருணாச்சல பிரதேச சர்வதேச எல்லை அருகே சாலை, ரயில் வசதி, விமான போக்குவரத்துக்கான பணிகளை சீன ராணுவம் துரித கதியில் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். கடுமையான மலைப் பகுதிகள், மோசமான வானிலை ஆகியவை தான் நம்கட்டமைப்பு பணிகளின் மேம்பாட்டிற்கு சவாலாக உள்ளன. எனினும் இந்திய ராணுவம் உச்சபட்ச விழிப்புடன் எத்தகைய சூழலையும் சமாளிக்கும் வகையில் தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.