முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை!

காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொடர்புடைய வழக்கில் இந்த சிபிஐ சோதனை நடைபெறுவதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இருவர் மீதும் புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பான விசாரணை என்றும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் 7 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டெல்லியில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வெளிநாட்டு பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெறுவதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சிபிஐ சோதனையை நக்கலடிக்கும் வகையில் கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து கார்த்தி சிதம்பரம் தனது ட்விட்டரில், “எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நான் மறந்தே விட்டேன். இது (சோதனை) கண்டிப்பாக புதிய சாதனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.