பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம்!

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் நாளை போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் , தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் 142ஆவது பிரிவு வழங்கியுள்ள தனக்கான சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பு வெளியானதும் அவரது உறவினர்கள், விடுதலையை எதிர்பார்த்து காத்திருந்த பல்வேறு தரப்பினரும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ஆணந்த கண்ணீர் வடித்தனர். அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பேரறிவாளன் விடுதலை தொடர்பான தீர்ப்பை வரவேற்றுள்ளனர்.

இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்ச நீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில் நாளை காலை 10 மணிக்கு அறப்போராட்டம் நடத்தப்படும் என கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். “காங்கிரஸ் கட்சியினர் அவரவர் பகுதியின் முக்கியமான இடங்களில் நின்று, வெள்ளை துணியை வாயில் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்துவார்கள். பேரறிவாளன் விடுதலைக்கு எதிரான பதாகைகளை கையில் பிடித்துக்கொண்டு போராட்டம் நடத்துவோம். தமிழர்கள் என்பதற்காக விடுதலை செய்யவேண்டும் என்றால் அது முறையாகாது” என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.