லாலு பிரசாத் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை!

பீகாரில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து ரூபாய் 139 கோடி பணம் மோசடி செய்தார் என வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சிறையில் இருந்த லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார். லாலு பிரசாந்த் யாதவின் ஜாமீன் மனு ஏற்றுக்கொள்ளப்பட்டு நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் மீது சமீபத்தில் தொடரப்பட்ட ஊழல் வழக்கு தொடர்பாக சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ் ரயில்வே அமைச்சராக இருந்த போது ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அது தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில்வே அமைச்சராக இருந்தபோது, 2004 முதல் 2009 வரை ஆட்சேர்ப்பு செய்ததில் முறைகேடு செய்ததாகக் கூறப்படும் புதிய ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. லாலு பிரசாத் யாதவ் தவிர, அவரது குடும்ப உறுப்பினர்களும் புதிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். புதிய வழக்கில், ரயில்வே வேலைகளை வழங்குவதற்காக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலம் மற்றும் சொத்துக்களை லஞ்சமாக பெற்றதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

பாட்னா, பீகார், டெல்லியில் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய 17 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரெயிவே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறது.