கேரளாவில் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் பலி!

கேரளா மாநிலம் பாலக்காடு அருகே காட்டு பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி இரு போலீசார் இறந்தனர்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே முட்டிக்குளங்கரையில் கேரளா போலீஸ் ஆயுதப்படை முகாம் உள்ளது. இங்கு தலைமை காவலர்களாக பணியாற்றியவர்கள் மோகன்தாஸ் (35) அசோக்குமார் (36).இவர்கள் நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு பணிக்கு திரும்பவில்லை. இவர்களை சக போலீசார் அலைபேசியில் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இந்நிலையில் முகாம் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அறுவடை முடிந்த வயலில் மர்மமான முறையில் இருவர் பலியாகி கிடப்பதாக ஊர்மக்கள் தகவல் தெரிவித்தனர்.அங்கு ஆய்வு செய்தபோது காணாமல் போன ஆயுதப்படை போலீசார் இருவரின் உடல்கள் தான் என்பது உறுதி செய்யப்பட்டது.

மரணத்தில் மர்மம் இருப்பதை அறிந்த போலீசார் அப்பகுதியிலுள்ள அனைவரிடம் விசாரணை நடத்தினர். சந்தேகத்துக்குரிய இருவரை பிடித்து விசாரித்தபோது காட்டுப் பன்றிக்கு வைத்த மின்பொறியில் சிக்கி போலீசார் இருவரும் பலியானது தெரியவந்தது. பாலக்காடு போலீசார் கூறுகையில் ‘காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக அப்பகுதியில் சிலர் மின்பொறி வைத்திருந்தனர். மின் பொறியில் சிக்கி இருவர் பலியாகி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த நபர்கள் மின் பொறியை அங்கிருந்து அகற்றிவிட்டு பலியான இருவர் உடல்களையும் வயலில் வீசியுள்ளனர். இது தொடர்பாக இருவர் சிக்கியுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது’ என்றனர்.