பெண்கள் முகத்தை மூடி செய்தி வாசிக்க தாலிபான் உத்தரவு!

முகத்தை மூடி செய்தி வாசிக்க பெண் ஊடகவியலாளர்களுக்கு தாலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானில் தாலிபான் பயங்கரவாத அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில் தாலிபான் தனது பிற்போக்குத் தனமான ஷரியா சட்டம் மூலமாக அந்நாட்டின் பெண்களின் கல்வி, வேலைவாய்ப்பு, சுதந்திரம் ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் விதித்து வருகின்றது.

ஆண்களின் துணை இல்லாமல் பெண்கள் தனியாக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. முகத்தை முழுவதுமாக மூடியபடி பணி நேரத்தில் உடை அணிய வேண்டும் உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்தியது. இதையும் மீறி பெண்களுக்கு நான்கு சக்கர வாகனம் ஓட்ட உரிமம் வழங்கக் கூடாது என்று சட்டம் வகுத்தது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் போது தங்கள் முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து செய்தி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர்கள் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டதாகவும், தாலிபான் அரசின் நல்லொழுக்கங்களுக்கான துறையின் செய்தி தொடர்பாளர் ஆகிப் மகாஜார் தெரிவித்துள்ளார். இதனை ஒரு ஆலோசனையாக வழங்கியிருப்பதாகவும், மே 21-ந் தேதிக்குப் பிறகு இதனை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.