இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும்: பிரதமர்

நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா அனைத்து வகையிலும் உதவும் என்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

மத்திய அரசின்பல்வேறு திட்ட பணிகள் தொடக்க விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். ஐதராபாத்தில் இருந்து தனி விமானத்தில் சென்னை வந்த பிரதமரை கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர் விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் ஐ.என்.எஸ். அடையாறுக்கு வந்தார். அங்கு அவரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு பிரதமர் நரேந்திர மோடி சாலை மார்க்கமாக நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்தார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய மந்திரி எல்.முருகன் ஆகியோர் வந்தனர். அப்போது அரங்கத்தில் இருந்த தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கட்சியினர் மிகுந்த சத்தத்துடன் வாழ்த்து கோஷம் எழுப்பி அவர்களை வரவேற்றனர். பிரதமர் நரேந்திர மோடி அனைவரையும் நோக்கி கையசைத்தும், தலை வணங்கியும் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மத்திய இணை மந்திரி எல்.முருகன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் ரூ.31,530 கோடி மதிப்பீட்டிலான 11 மக்கள் நலத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். அவற்றில் 5 திட்டங்கள் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருந்த திட்டங்களாகும். மற்ற 6 திட்டங்கள், இனி தொடங்குவதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களாகும். அதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சிறப்புரையாற்றினார். அப்போது இலங்கையில் நிலவும் சூழல் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது:-

இலங்கை பிரச்சினை இலங்கை சிரமமான சூழ்நிலையை கடந்து கொண்டிருக்கிறது. அங்கு நிலவும் தற்போதைய சூழல் உங்களுக்கு நிச்சயம் கவலையளிக்கக்கூடியதாக இருக்கும். ஒரு நெருங்கிய நண்பன் என்ற வகையிலும், அண்டை நாடு என்ற முறையிலும் இலங்கைக்கு அனைத்துவிதமான உதவிகளையும் இந்தியா அளித்து வருகிறது. நிதி, எரிபொருள், உணவு, மருந்துகள், பிற அத்தியாவசிய பொருட்களும் இதில் அடங்கும். இலங்கைக்கு பொருளாதார ஆதரவு அளிப்பது தொடர்பாக சர்வதேச மன்றங்களில் இந்தியா உரக்க பேசி இருக்கிறது. ஜனநாயகம், சிரத்தன்மை, பொருளாதார மீட்பு ஆகியவற்றுக்கு ஆதரவாக இலங்கை மக்களுக்கு இந்தியா துணை நிற்கும். தொடர்ந்து அந்த நாட்டுக்கு உதவுவோம்.

யாழ்ப்பாணத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்றிருந்தேன். அதை என்னால் மறக்க முடியாது. யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் நான்தான். இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசாங்கம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்கள் மக்களின் உடல்நலம், போக்குவரத்து, வீட்டு வசதி மற்றும் கலாசாரம் ஆகியவற்றை உள்ளடக்கும். சுதந்திர திருநாள் அமுத பெருநாளை நாம் இப்போது கொண்டாடி வருகிறோம். 75 ஆண்டுகளுக்கு முன்பாக சுதந்திர நாடு என்கிற வகையிலே நாம் நம்முடைய பயணத்தை தொடங்கினோம்.

நமது நாட்டுக்காக சுதந்திர போராட்ட வீரர்கள் பல கனவுகளை கண்டார்கள். அவற்றை நிறைவேற்றுவது நமது கடமை. நாம் அனைவரும் அதற்கு நம்மை தயார்படுத்திக் கொள்வோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தியாவை மேலும் வளமான நாடாக மாற்றுவோம்.
தமிழக வளர்ச்சி பயணத்தின் மேலும் உன்னத அத்தியாயத்தை கொண்டாட நாம் கூடியிருக்கிறோம். ரூ.31,500 கோடிக்கும் மேற்பட்ட திட்டங்கள் இங்கே தொடங்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் இருக்கும் இந்த திட்டங்கள் ஒவ்வொன்றும் வேலைவாய்ப்புகளையும், தற்சார்பு நிலை நோக்கிய நமது உறுதிபாட்டையும் ஊக்கப்படுத்தும். நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையின் தரத்தை விட சிறப்பான ஒரு வாழ்க்கைத்தரத்தை உங்கள் குழந்தைகள் வாழவேண்டும் என்று அனைவருமே விரும்புவீர்கள். இதற்கு முக்கியமான அடிப்படை தேவைகளில் ஒன்று தான் தலைசிறந்த உள்கட்டமைப்பு வசதிகள். எந்த நாடுகளெல்லாம் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முக்கியத்துவம் அளித்தனவோ, அந்த நாடுகள் வளரும் நாடுகள் என்ற நிலையில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற நிலைக்கு உயர்ந்தன என்பது வரலாறு.

ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் தலைசிறந்த தரமும், நீடித்த தன்மையுடன் உடைய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதில் இந்திய அரசு முழு கவனத்தையும் செலுத்தி வருகிறது. எந்த துறையை எடுத்துக் கொண்டாலும் சரி, அனைத்தும் அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நிலையை நோக்கி நாம் பயணிக்கிறோம். ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீரை கொண்டு சேர்க்கப்படுவதை உறுதி செய்ய பணியாற்றி கொண்டிருக்கிறோம். குழாய் வழி குடிநீர் திட்டத்தின்மூலம் பாரபட்சமோ, விடுபட்டு போவதற்கான சாத்தியக்கூறு இருக்காது.

புறக்கட்டமைப்பு மீது கவனம் செலுத்தப்படும்போது நாட்டின் இளைஞர்களே அதிகம் பயன்பெறுவார்கள். இளைஞர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற இது உதவுவதுடன், செல்வத்தையும் மதிப்பையும் உருவாக்க இதை இளைஞர்கள் பயன்படுத்தி கொள்வார்கள். சில ஆண்டுகள் முன்பு வரை கட்டமைப்பு என்று சொன்னால் சாலைகள், மின்சாரம், நீர் ஆகியவை மட்டுமே கருதப்பட்டன. இன்று நாம் இந்தியாவின் எரிவாயு குழாய் வலைப்பின்னலை விரிவாக்க செயல்பட்டு கொண்டிருக்கிறோம். அதிவேக இணையத்தை நாட்டின் ஒவ்வொரு கிராமத்துக்கும் கொண்டு செல்வதே எங்கள் தொலைநோக்கு பார்வை. இது எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பாக தொடங்கினோம். இனி வரும் ஆண்டுகளில் இந்தியாவுக்கு மிக உயர்தரம் வாய்ந்த கட்டமைப்பை உறுதி செய்யும் நோக்கத்தோடு, சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும், அனைத்து அமைச்சகங்களையும் இந்த திட்டம் ஒருங்கிணைக்கும். செங்கோட்டையில் இருந்து தேசிய கட்டமைப்பு குழாய் பற்றி பேசியிருந்தேன். இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.100 லட்சம் கோடிக்கும் மேற்பட்டது. இந்த தொலைநோக்கை மெய்ப்படுத்துவதை நோக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ் மொழியையும், கலாசாரத்தையும் மேலும் பிரபலப்படுத்துவதற்கு இந்திய அரசு முழு அர்ப்பணிப்புடன் இருக்கிறது. செம்மொழி தமிழாய்வு மையத்துக்கு புதிய வளாகம் ஒன்று இந்தாண்டு ஜனவரி மாதம் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்த புதிய வளாகத்துக்கு முழுக்க முழுக்க மத்திய அரசே நிதி வழங்குகிறது. இங்கு ஒரு விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கு கூடம், பல்லூடக அரங்கும் அமைக்கப்பட்டிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் படிப்புகளுக்காக சுப்பிரமணிய பாரதியார் பெயரில் ஒரு இருக்கை சமீபத்தில் தான் அறிவிக்கப்பட்டது. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் என் தொகுதியில் வருவதால் என் உவகை கூடுதல் விசேஷமானது. இந்திய மொழிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக்கொள்கை அவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. தேசிய கல்வி கொள்கை காரணமாக தொழில்நுட்ப மருத்துவ படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே படிக்க முடியும். தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் இதனால் பலன் அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.