லடாக் வாகன விபத்தில் ராணுவ வீரர்கள் 7 பேர் பலி! பிரதமர் இரங்கல்

லடாக்கின் துர்துக் பகுதியில் நிகழ்ந்த வாகன விபத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

லடாக்கின் துர்துக் பகுதியில் ராணுவ வீரர்கள் 26 பேரை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிக்கி ராணுவ வீரர்கள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். வாகன விபத்தில் மேலும் சில ராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹெலிகாப்டர் மூலமாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக, இந்திய விமானப்படையிடம் ராணுவம் உதவி கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மற்றும் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களை இந்திய விமானப்படை மூலம் மேற்கு பிராந்திய தலைமையகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்து வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பர்தார்பூரில் உள்ள தற்காலிக முகாமில் இருந்து எல்லை பாதுகாப்பு பணிக்கு 26 வீரர்களுடன் வாகனம் சென்று கொண்டிருந்தது. இந்த வாகனம் காலை 9 மணி அளவில் தோய்ஸ் பகுதிதியில் இருந்து சுமார் 25 கி.மீ. தொலைவில் சென்று கொண்டிருந்த போது, சாலையில் இருந்து தடுமாறி ஷியோக் ஆற்றில் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 50 அடி முதல் 60 அடி ஆழம் கொண்ட இந்த ஆற்றில் ராணுவ வாகனம் கவிழ்ந்தததில் 7 வீரர்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள வீரர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்த வீரர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்றார்.

இதனிடையே, 19 ராணுவ வீரர்கள் மீட்கப்பட்டு விமானம் மூலம் சண்டிமந்திர் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பின்பு விபத்திற்கான காரணம் வெளியாகும் என தெரிகிறது. வாகனம் ஆற்றில் பாய்ந்து ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லடாக்கில் பேருந்து விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “லடாக்கில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை இழந்துவிட்டோம். எனது எண்ணங்கள் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.