துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த 5ம் வகுப்பு மாணவன் கைது!

அமெரிக்காவில், பள்ளிக்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, மிரட்டல் விடுத்த ஐந்தாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவில், நாளுக்கு நாள் துப்பாக்கி கலாசாரம் தலை தூக்கி உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி உள்ளதால், அந்நாட்டில், அவ்வப்போது துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 19 பள்ளிக் குழந்தைகள், 2 ஆசிரியைகள் என மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞரை போலீசார் சுட்டு வீழ்த்தினர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகு, நாடு முழுவதும் பள்ளிக்கூடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். துப்பாக்கி வாங்குவதற்கான கட்டுப்பாடுகளை கடினமாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துப்பாக்கி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், இதற்கு ஏற்றபடி, சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று, பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு நடத்துவேன் என, 5 ஆம் வகுப்பு மாணவன் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புளோரிடா மாகாணம் கேப் கரொல் நகரில் உள்ள பெட்ரிட் ஆரம்ப பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் டேனியல் மார்கஸ் (வயது 10), பள்ளிக்கூடத்திற்குள் புகுந்து மிகப்பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்துவேன் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளான். இதனை தொடர்ந்து, அந்த சிறுவனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், உவால்டே துப்பாக்கிச்சூ ட்டிற்கு பிறகு இந்த மாணவனின் மனநிலையில் வெறுப்புணர்வு இருந்துள்ளது என்றும், இதை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் தெரிவித்தனர்.