மாநிலங்களவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவு!

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்திலிருந்து 6 பேர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களுக்குத் தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டது. கடந்த 24-ஆம் தேதியன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. திமுகவைச் சோ்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகிய மூன்று வேட்பாளா்கள் கடந்த 27-ஆம் தேதியன்று மனு தாக்கல் செய்தனா். இதைத் தொடா்ந்து, அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், ஆர்.தர்மர், காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் ஆகியோர் மே 30ஆம் தேதி தோ்தல் நடத்தும் அதிகாரியும், சட்டப் பேரவைச் செயலாளருமான கி.சீனிவாசனிடம் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இந்நிலையில், இன்று மாலை 3 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நிறைவுபெற்றது. சுயேட்சையாக 7 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் பரிசீலனையின் போது மனுக்கள் நிராகரிக்கப்படும். தொடர்ந்து, தமிழகத்திலிருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படவுள்ளனர்.

நாடு முழுவதும் மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட 57 உறுப்பினா்களின் பதவிக் காலம் நிறைவடைய உள்ள நிலையில், அந்த இடங்களுக்கு ஜூன் 10-ஆம் தேதி தோ்தல் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.