ஜம்மு காஷ்மீரில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை சுட்டுக் கொலை!

ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையாக உள்ள இந்து, சீக்கியம் உள்ளிட்ட மதத்தினரை குறிவைத்து கடந்த சில நாட்களாக பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஜம்மு – காஷ்மீரின் பள்ளிக்கூடத்தில் புகுந்து பெண் ஆசிரியரை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிய சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்முவின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜ்னி பாலா (36). இவர் காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கோபால்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் இந்து மதத்தைச் (காஷ்மீரி பண்டிட்) சேர்ந்தவராவார். இன்று காலை ஆசிரியை ராஜ்னி பள்ளிக்கூடத்தில் வழக்கமான பணிகளைச் செய்துகொண்டிருந்தார். அப்போது, பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த பயங்கரவாதிகள் ராஜ்னியை சரமாரியாக சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பயங்கரவாதிகள் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து படுகாயமடைந்த ஆசிரியை ராஜ்னியை மீட்ட சக ஆசிரியர்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் ராஜ்னியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளிக்கூடம் அமைந்துள்ள பகுதியைச் சுற்றிவளைத்த பாதுகாப்புப் படையினர் தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

கடந்த 5 மாதங்களில் ஜம்மு – காஷ்மீரில் 26 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டுமே பயங்கரவாதிகளால் குறிவைத்து தாக்கப்படுவோரின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. அதில் 3 பேர் பணியில் இல்லாத போலீசார், 4 பேர் பொதுமக்கள் ஆவர்.