சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 4 பேர் பலி, 15 பேர் காயம்!

சீனாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நான்கு பேர் இறந்தனர்; 15 பேர் காயம் அடைந்தனர்.

தென்மேற்கு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள யான் நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆகப் பதிவானது. பூமிக்கடியில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் இதன் மையம் இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் சேதமடைந்து இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி இதுவரை நான்கு பேர் இறந்துள்ளனர். 15 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. மீட்பு பணிகளில் 800க்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.