பினராய் விஜயன் சூட்கேசில் துபாய்க்கு பணம் கடத்தினார்: ஸ்வப்னா சுரேஷ்

தங்க கடத்தல் விஷயத்தில் மாநில முதல்வருக்கும் தொடர்பு இருப்பதாக ஸ்வப்னா சுரேஷ் அளித்துள்ள வாக்குமூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகம் பெயரில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்திய வழக்கில் தூதரக முன்னாள் ஊழியர்கள் ஸ்வப்னா சுரேஷ், சரித் உள்ளிட்டோர் சிக்கினர். இந்த வழக்கை விசாரித்து வந்த என்ஐஏ, உபா சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, ஸ்வப்னா சுரேஷை 2020 ஜூலை மாதம் பெங்களூருவில் கைது செய்தது. மேலும் இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராய் விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

கேரள முதல்வரின் கட்டுப்பாட்டில் இருந்த தகவல் தொழில்நுட்பத் துறையில் ஸ்வப்னா சுரேஷ் பணியாற்றி வந்த நிலையில், இந்தக் கடத்தலில் முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் உள்ளிட்டோருக்கும் பங்கு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதற்கிடையே, இந்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது ஜாமீனில் வெளியே இருக்கும் ஸ்வப்னா சுரேஷ், தான் நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம் அளிக்க விரும்புவதாகக் கூறினார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், அதனால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளியிடப் போவதாகவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், முக்கியமான இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் நேற்று நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரது மனைவி மற்றும் மகள், பினராயி விஜயனின் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளது என்று தமது வாக்குமூலத்தில் ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளதாக தெரிகிறது. ஸ்வப்னா சுரேஷின் இந்த வாக்கு மூலம் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று இரண்டாவது நாளாக அவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்தார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், கூறியதாவது:-

கடந்த 2016ம் ஆண்டு தான் சிவசங்கர் என்னுடன் முதன் முதலாக தொடர்பு கொண்டார். அப்போது நான் அமீரக அலுவலகத்தில் பணியாற்றி வந்தேன். என்னை தொடர்பு கொண்ட சிவசங்கர், முதல்வர் துபாயில் இருக்கிறார். போகும்போது ஒரு முக்கியமான சூட்கேசை மறந்துவிட்டு சென்றார். அதை உடனடியாக கொடுத்து அனுப்பவேண்டும் என்றும் கூறினார். சிறிது நேரத்தில் துணை தூதரக அலுவலகத்திற்கு சிவசங்கர் ஒரு சூட்கேஸ் அனுப்பி வைத்தார். அதை தூதரகத்தில் உள்ள ஒரு முக்கிய அதிகாரி மூலம் துபாய்க்கு கொடுத்து அனுப்பினேன். அனுப்புவதற்கு முன் தூதரக அலுவலகத்தில் உள்ள ஸ்கேன் எந்திரம் மூலம் பரிசோதித்தபாது அதில் கட்டு கட்டாக அமெரிக்க டாலர் இருந்தது.

மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள துணை தூதர் வீட்டில் இருந்து அடிக்கடி பிரியாணி பாத்திரங்கள் பினராய் விஜயன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. சிவசங்கர் ஏற்பாட்டில் தான் இவை அனுப்பப்பட்டன. ஆனால் அதில் பிரியாணி மட்டுமல்லாமல் தங்கம் உள்ளிட்ட உலோக பொருட்கள் மறைத்து வைத்து அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பல முக்கிய விபரங்களை நீதிமன்றத்தில் கூறியுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.