மேற்கு வங்க தோல்விக்கு கொரோனாவே காரணம்: ஜெ.பி.நட்டா

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள சூழலில், “தேர்தல் தோல்விக்கு கொரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம்” என்று, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கூறினார்.

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு 8 கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களைக் கைப்பற்றி தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. அதனை எதிர்த்து களம் கண்ட பாஜக 77 இடங்களைப் பிடித்து தோல்வியைச் சந்தித்தது. இந்த தேர்தல் முடிந்து ஓராண்டைக் கடந்துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெ.பி.நட்டா பேசியதாவது:-

மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தை கரோனா இரண்டாம் அலை பாதிக்காமல் இருந்திருந்தால், பாஜக ஆட்சிக்கு வந்திருக்கும். நான்காம் கட்டத் தேர்தலின்போது கரோனா இரண்டாம் அலை பாதிப்பு ஏற்பட்டதால், பிரசாரத்தை ரத்து செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. எஞ்சிய கட்ட தேர்தல்களும் பிரசாரம் மேற்கொள்ளாமலே சந்திக்க வேண்டிய சூழல் உருவானது. எனவே, அடுத்த முறை மாநிலத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றி, கொல்கத்தாவில் வெற்றிப் பேரணியை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களிடையே பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தை பிரிப்பது தொடர்பாக பேசுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார். கட்சியின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டுக்கு மாறாக மாநில நிர்வாகிகள் பேசுவது மக்களிடையே குழப்பத்துக்கு வழிவகுக்கும் என்றார் அவர்.

இந்நிலையில் நபிகள் நாயகம் குறித்து பாஜக நிா்வாகிகள் நவீன் ஜிண்டால், நூபுா் சா்மா தெரிவித்த கருத்துகள் வெறுக்கத்தக்கவை. அவா்கள் இருவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி வலியுறுத்தியுள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக ட்விட்டரில் மம்தா பானா்ஜி வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

பாஜக நிா்வாகிகளின் வெறுக்கத்தக்க பேச்சு, வன்முறைக்கு மட்டுமன்றி சமூகத்தில் பிரிவினைக்கும் வழிவகுப்பதாகும். அத்துடன், நாட்டின் அமைதிக்கும் சமூக நட்புறவுக்கும் குந்தகம் விளைவிப்பதாகவும் உள்ளது. நாட்டின் ஒற்றுமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படக் கூடாது. வெறுப்பூட்டும் வகையில் பேசிய இரு பாஜக நிா்வாகிகளும் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். பாஜக தலைவா்கள் இதுபோல் வெறுப்புணா்வைப் பரப்பும் வகையில் பேசினாலும், நாட்டின் நலன் கருதி அனைத்து மதங்கள், சமூகங்களைச் சோ்ந்த எனது சகோதர, சகோதரிகள் அமைதி காக்க வேண்டும். இவ்வாறு மம்தா குறிப்பிட்டுள்ளாா்.