மோடியின் அறிவிப்பு இளைஞர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறது: அமித் ஷா

நாட்டில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியிடங்களை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிரப்ப பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருப்பதன் மூலம் இளைஞர்கள் புதிய நம்பிக்கையைப் பெற்றிருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் புதிதாக 10 லட்சம் பேருக்கு மத்திய அரசுப் பணியில் வேலை வாய்ப்பு வழங்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார். மத்திய அரசுத் துறைகள், அமைச்சகங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது அரசுத் துறைகளிலும், அமைச்சகங்களிலும் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி இந்த உத்தரவை பிறப்பித்திருக்கிறார். அதன்படி, நாட்டில், மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் காலியாக இருக்கும் 10 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து அமித் ஷா தனது சுட்டுரைப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிய இந்தியாவின் அடிப்படையே, இளைஞர்களின் சக்திதான். எனவே, அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காகவே பிரதமர் மோடி தொடர்ந்து உழைக்கிறார். மத்திய அரசில் காலியாக இருக்கும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களில் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் இளைஞர்களை பணியமர்த்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் இளைஞர்களுக்கு புதிய நம்பிக்கையும், தைரியமும் கிடைத்துள்ளது. இதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் பிரதமர் மோடி. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.