இளைஞர்களின் கோரிக்கைக்கு காங்கிரஸ் துணை நிற்கிறது: சோனியா காந்தி

இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

அக்னிபத் என்ற புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு வடமாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பீகாரில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறையும் வெடித்தது. ரெயில்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இதனால், பல பகுதிகளில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் 8 மாநிலங்களுக்கு பரவியுள்ளது.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, இளைஞர்களின் நியாயமான கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பிந்தைய பாதிப்புகள் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி, வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியிருப்பதாவது:-

உங்களின் (இளைஞர்கள்) குரலை புறக்கணித்து புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டத்தை மத்திய அரசு அறிவித்து இருப்பது அதிருப்தி அளிக்கிறது. புதிய அக்னிபத் திட்டம் இலக்குகள் அற்றது. புதிய திட்டம் குறித்து முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இளைஞர்களின் நலனை காக்க காங்கிரஸ் உறுதியுடன் துணைநிற்கும். உண்மையான தேசபக்தராக நாம், வன்முறை இன்றி அமதியான வழியில் நமது எதிர்ப்பை காட்டுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வேளாண் சட்டத்தை போல் அக்னிபத் திட்டத்தையும் மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “தொடர்ந்து 8 ஆண்டுகளாக, பா.ஜ.க. அரசு ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்’ கொள்கைகளை அவமதித்து வருகிறது. கருப்பு விவசாய சட்டத்தை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று நான் முன்பே கூறியிருந்தேன். அதே போல, நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி ‘அக்னிபத்’ திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்” என்று அதில் ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.