அமெரிக்காவில் லாரியில் இருந்து 46 பேர் சடலமாக மீட்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 46 அகதிகள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ளது சான் ஆன்டோனியோ நகரம். இங்குள்ள ரயில் பாதைக்கு அருகே கண்டெய்னர் லாரி ஒன்றில் சடலங்கள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு விரைந்து வந்த போலீசார் லாரியை சோதனை செய்தனர். அப்போது, சுமார் 40க்கும் மேற்பட்டோர் சடலமாக கிடப்பது தெரியவந்துள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதுதவிர, 16 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் குழந்தைகள் என்பது கவனிக்கத்தக்கது.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் அனைவரும் அகதிகள் என தெரிய வந்துள்ளது. சிகிச்சை பெறுபவர்களிடம் விசாரணை நடத்திய பின்பே முழுமையான விவரம் தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த லாரியில் இருந்து தங்களை காப்பாற்றுங்கள் என அதிகாலையில் அலறல் சத்தம் கேட்டதையடுத்து, உள்ளூர் தொழிலாளி ஒருவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்ததாக போலீஸ் தலைவர் வில்லியம் மக்மானஸ் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் ஆண்கள் மற்றும் பெண்களின் கலவையாக இருந்தனர். மற்றும் அனைத்து வயதின் கலவையாகவும் அவர்கள் இருந்தனர், ஆனால் உயிரிழந்தவர்கள் எவரும் சிறார்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த லாரியில் குடிநீர் வசதியோ அல்லது காற்று வசதியோ இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.