அகதியாக வந்து தனுஷ்கோடியில் மயங்கிய இலங்கை தம்பதி!

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட முதிய தம்பதி தனுஷ்கோடிக்கு கள்ளப்படகில் அகதியாக வந்து மயங்கி கிடந்தனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து மரைன் போலீசார் மீட்டனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு அந்நாடு சந்திக்கும் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியாக இது மாறியுள்ளது. இதனால் கடந்த சில மாதங்களாக இலங்கையில் பெட்ரோல், டீசல், உணவு பொருட்களில் விலை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் தான் இலங்கையில் இருந்து ஏராளமான மக்கள் தமிழகத்துக்கு அகதிகளாக வருகின்றனர். தற்போது வரை 90 பேர் கடல் வழியாக இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ராமேஸ்வரம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகே முதிய தம்பதி மயங்கிய நிலையில் கிடந்தனர். இதை பார்த்த மீனவர்கள் மரைன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர்களை மீட்டு விசாரிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதையடுத்து அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. அதனை சாப்பிட்ட தம்பதி எழுந்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அவர்கள் இலங்கை மன்னாரை சேர்ந்த பெரியண்ணன் சிவன் (வயது 82 ), பரமேஸ்வரி (வயது 77 ) என்பது தெரியவந்தது. இலங்கை பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மன்னாரை சேர்ந்த இவர்கள் மயங்கிய நிலையில் கடற்கரையில் கிடந்துள்ளனர். இவர்களை மீட்ட மரைன் காவல் காவல் துறையினர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்து விசாரணை செய்து வருகின்றனர். இதையடுத்து இந்த தம்பதியை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.