நதிகளை வழிபடுவதே சனாதனம்: ஆளுநர் ஆர்.என்.ரவி

நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்களே, அதுதான் சனாதனம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

வேலூரில் அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் வேலூர் ஸ்ரீநாராயணி பீடம் ஒருங்கிணைந்து வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயண பீடத்தில் பாலாறு பெருவிழா இன்று நடைபெற்றது. இன்று முதல் ஐந்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் நாராயணி பீடத்தின் சக்தி அம்மா மற்றும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று குத்து விளக்கு ஏற்றி வைத்தனர். விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:-

நதிகளை நாம் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நதிகளை நாம் தெய்வங்களாக வணங்க வேண்டும். அப்போதுதான் அவைகளை பாதுகாக்க முடியும்.

2016 இல் பிரதமர் காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார், ஆரம்பத்தில் பல நாடுகள் ஆர்வம் காட்டவில்லை. தற்போது 100 நாடுகள் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள். 2025-க்குள் 100 ஜிகா வாட்ஸ் மரபுசாரா எரிசக்திக்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2021 செப்டம்பர் மாதத்திலே அடைந்துவிட்டோம். இந்தியா 2030-க்குள் 500 ஜிகா வாட் மின் உற்பத்தி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் அதுதான் சனாதனம். பூமி ஒரு ஆதாரமாக பார்க்கக் கூடாது, அதை வணங்க வேண்டும். கால நிலை மாற்றம் உலகத்தில் மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. அடுத்த 30 – 40 ஆண்டுகளுக்குள் சிறிய தீவுகள் நேரில் மூழ்கும் அபாயம் உள்ளது. கார்பன் வெளியேற்றத்தால் பல பிரச்னை ஏற்படுகிறது.

என்னுடைய குழந்தை பருவத்தில் இருந்து நீரை வழிபட்டுள்ளேன். ஆதிகாலம் முதல் பஞ்ச பூதங்களை வணங்கி வருகிறோம். சிலப்பதிகாரத்தில் அரசன் கூட குளம், குளங்களை வெட்டி பாதுகாக்க வேண்டும் என இளங்கோவடிகள் சொன்னது போல. ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்ரித் சரோவர் என்ற திட்டத்தை பிரதமர் செய்யல்படுத்தி வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் 2023 ஆகஸ்ட் மாதத்துக்குள் 50 ஆயிரம் குளங்களை வெட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாம் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அடுத்து வரும் 25 ஆண்டுகள் மிக முக்கியமான ஆண்டுகள், 2047 ஏரியில் நாம் உலக நாடுகளுக்கு தலைமை நாடாகத் திகழ வேண்டும். அதற்கு நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.