பெரியாறு அணையை உடைக்க கேரளாவில் கையெழுத்து இயக்கம்!

பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் சில அமைப்புகள் கையெழுத்து இயக்கம் நடத்தி வருவதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கேரளாவில் இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பத்து நாட்களாக பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ‘சேவ் கேரளா பிரிகேட்’ என்ற அமைப்பு கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறது. பத்து லட்சம் கையெழுத்துக்கள் பெற்று பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ளதாக அதன் நிறுவனர் ரசல் ஜோய் தெரிவித்துள்ளார்.

பலமாக உள்ள பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி பிரசாரம் செய்வதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகி அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:-

பெரியாறு அணை பலமாக உள்ளது என 2006, 2014ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் செய்யப்படும் பிரசாரத்திற்கு அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும். தேசிய புலனாய்வு அமைப்பு பிரசாரத்தை தடுக்க வேண்டும். தவறினால் தேவிகுளம், பீர்மேடு, உடுப்பஞ்சோலை தாலுகாக்களை தமிழகத்துடன் இணைக்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தை துவக்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.