பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம்!

பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை திருமணம் நடைபெற உள்ளது.

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, 48 வயதாகும் பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான், கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, முதல் மனைவியை விவாகரத்து செய்தார். இவர்களுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள், தாயுடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். எனினும், பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மான் பதவியேற்ற நிகழ்ச்சியில், அவரது குழந்தைகள் பங்கேற்றனர்.

இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில், முதலமைச்சர் பகவந்த் மானுக்கு நாளை இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. குர்ப்ரீத் கவுர் என்பவரை அவர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். சண்டிகரில் எளிய முறையில் நாளை நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சியில், ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, டெல்லி மற்றும் பஞ்சாப் அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய விவிஐபிக்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளனர். மேலும், முதலமைச்சர் பகவந்த் மானின் குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.