உடைக்கப்பட்ட கதவு வழியாக அதிமுக தலைமை அலுவலகத்திற்குள் நுழைந்தார் ஓபிஎஸ்!

பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது.

சென்னை வானகரத்தில் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு தொடங்க உள்ளது. பொதுக்குழுவில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வானகரம் நோக்கி பயணித்து வருகிறார். இதற்கிடையில், ஓ.பன்னீர் செல்வம் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி பயணித்து வருகிறார். இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த மோதலின் போது, பூட்டப்பட்டிருந்த அதிமுக தலைமை அலுலகத்தின் கதவுகள் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் அடித்து உடைக்கப்பட்டது. கதவை அடித்து உடைத்த ஒ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை கழகம் உள்ளே நுழைந்தனர். மேலும், அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த ஈபிஎஸ் பேனர்கள் கிழிக்கப்பட்டன.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறைகள் தொடர்பாக பேட்டி அளித்த அ.தி.மு.க. மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியதாவது:-

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. கடந்த பொதுக் குழு கூட்டத்தின் போது அடுத்த பொதுக்குழு தேதி அறிவிக்கப்பட்டது . இதை ஏற்றுக் கொண்டுதான் ஓ.பன்னீர் செல்வம் சென்றார். ஆனால் இந்த பொதுக்குழுவிற்கு தடை வாங்க நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறினார் . நீதிமன்றம் பொதுக்குழுவில் கலந்து கொண்டு உங்களின் கருத்துகளை தெரிவித்துக் கொள்ளலாம் என்று கூறிய பிறகும் ஓ.பன்னீர் செல்வம் வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார். ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு மேடையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் விரக்தியின் உச்சத்தில் இருக்கிறார். அவரின் சுயநலத்துக்காக கட்சியை அழிக்க முடிவு செய்துள்ளார். நிச்சயம் கட்சி அவரை கண்டிக்கும். இதற்கு மேல் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.