அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது: சசிகலா!

அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது என்று சசிகலா தெரிவித்துள்ளார்

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் அரங்கேறிய காட்சிகளில் முக்கியமானது சசிகலா குடும்பம் ஓரங்கட்டப்பட்டது. டிடிவி தினகரன் அமமுக எனும் தனிக்கட்சியை ஆரம்பித்த போது அவருடன் மோதல் போக்கில் ஈடுபட்ட சசிகலா சகோதரர் திவாகரன் 2018ஆம் ஆண்டு அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். ஆனால், திவாகரன் கட்சியில் சசிகலாவின் புகைப்படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாது என்று சசிகலா சார்பில் திவாகரனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் சசிகலா, திவாகரன் உறவில் விரிசல் ஏற்பட்டது. சசிகலாவைத் தனது முன்னாள் சகோதரி என்றும் திவாகரன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில், சசிகலா – திவாகரன் ஆகிய இருவருக்கும் இடையேயான மனக்கசப்பு நீங்கியுள்ளது. அதன் ஒருபகுதியாக, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டாலும் தொடர்ந்து பொதுச் செயலாளர் என்றே தன்னை அடையாளப்படுத்தி வரும் சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் தனது கட்சியை திவாகரன் இணைக்க முடிவு செய்தார். அதன்படி, திவாகரனின் கட்சி இணைப்பு விழா தஞ்சையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் சசிகலா தலைமையிலான அதிமுகவுடன் திவாகரன் தனது கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை இணைத்து கொண்டார். மேடையில் சசிகலாவுக்கு மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் சசிகலா பேசியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பயிற்சி பட்டறையில் படித்தவள் சொல்கிறேன், வீர தமிழச்சியாக சொல்கிறேன், நான் இருக்கின்றவரை அதிமுகவை யாரும் அபகரிக்கவோ, அழித்துவிடவோ முடியாது; திமுக எத்தனை கணக்கு போட்டாலும் அது பலிக்காது. இன்று அண்ணா திராவிடர் கழகம் இணைந்துள்ளது. இதேபோல் பிரிந்து செயல்படும் அனைவரையும் ஒன்று சேர்த்து தமிழகத்தில் மிக பெரிய கட்சி நம் கட்சி என்று உருவாக்கும் வரை நான் ஓயமாட்டேன்.

பிரிந்தவர்களை கட்சியில் எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்து அவர்கள் நம் கட்சிக்காரர்கள் என்று பார்ப்போமே தவிர அவர் அந்த அணியை சேர்ந்தவர், அவர் இந்த அணியை சேர்ந்தவர் என்று என்றுமே நினைக்கவில்லை. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஆனால் அவருக்கு யாரையும் பிரித்துப் பார்க்கத் தெரியாது. அனைவரையும் சமமாக பார்த்தால், யாரையும் துண்டாட மாட்டார் .அதைத்தான் அன்றைக்கு நாங்கள் கண்டுபிடித்தோம். அதில் வெற்றி பெற்றோம்.

அனைவரையும் ஒன்றிணைத்து கழகத்தை வெற்றிப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் என் எஞ்சிய வாழ்க்கையில் லட்சியமாக கருதுகிறேன். பெங்களூரில் இருந்து வந்த நாள் முதல் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற கருத்தை தான் தற்போது வரை வலியுறுத்தி வருகிறேன். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் போல் ஒரு கண்ணியமும், புரட்சித்தலைவி ஜெயலலிதா போல் ஒரு கடமையும் இருக்கும்தான் என எண்ணி இந்த இயக்கத்தை மக்கள் ஆதரித்தார்கள். தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். சிலரின் தனிப்பட்ட தேவை ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா. சில சுயநலவாதிகள், தாங்கள் இருக்கும் இயக்கம் எப்பேர்ப்பட்ட இயக்கம்! எப்படிப்பட்ட தலைவர்கள் கொண்ட இயக்கம், நம் தலைவர்கள் பட்ட கஷ்டம் என்ன அவர்கள் செய்த தியாகங்கள் என்ன எத்தனை கழக தொண்டர்கள் தங்கள் இன்னுயிர்களை தந்துள்ளார்கள் என்று சிந்திக்காமல் தங்களுக்கு கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு, நான் பெரியவன்! நீ பெரியவன் என்று போட்டி போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் என்று எண்ணும்போது என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

அம்மாவின் மறைவிற்கு பிறகு 2016 டிசம்பர் மாதம் வரை நடந்த பொது குழுவுக்குள் தான் உண்மையான பொதுக்குழு. அந்தப் பொதுகுழுவிற்கு தான் கழக சட்ட திட்ட விதிகளின்படி முறையாக அழைப்பு கொடுத்து ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆசிர்வாதத்தோடு சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு நடைபெற்றதாக சொல்லப்படும் பொதுக்குழு அனைத்தும் நிர்வாகிகள் கூட்டமாக தான் நம் கழகத் தொண்டர்கள் பார்க்கிறார்கள். அதிமுக வரலாற்றிலேயே ஆண்டுக்கு ஒரு முறை, கழக சட்ட திட்டங்கள் மற்றும் விதிகளை யாருமே மாற்றியது இல்லை. ஆனால் தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. இவர்கள் செய்கின்ற காரியங்கள் அனைத்துமே சட்டப்படி செல்லாது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு ஏற்படும், நான் இருக்கும் வரை யாராலும் இயக்கத்தை அபகரித்து விடவோ அழித்துவிட முடியாது., விரைவில் எல்லாவற்றையும் சரி செய்து அனைவரையும் ஒருங்கிணைந்து மீண்டும் நமது இயக்கம் எந்தவித ஜாதி மத பேதமின்றி, வேண்டியவர் வேண்டாதவர் என்ற பாகுபாடு இன்றி அதே மிடுக்கோடும் செறுக்கோடும் பொது பொலிவோடும் விளங்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.