ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு தடை!

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர், கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஜல்லிக்கட்டு விளையாட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஜல்லிக்கட்டில் கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டு மாடுகளை அனுமதிக்கக் கூடாது; கால்நடை டாக்டர்கள் சான்றளித்த நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்’ என உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள், ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து விசாரணையை ஒத்தி வைத்தனர்.