டுவிட்டரின் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்துகிறார்கள்: எலான் மஸ்க்

டுவிட்டரின் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்துவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் சமூகவலைதளமான டுவிட்டரை வாங்க முடிவு செய்தார். இதையடுத்து, 44 பில்லியன் டாலர்களுக்கு டுவிட்டரை எலான் மஸ்கிடம் விற்க டுவிட்டர் நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் செய்தது. இதற்கிடையே, டுவிட்டரில் உள்ள போலி கணக்குகள், பயன்படுத்தப்படாத நிலையில் உள்ள கணக்குகள் உள்பட சில விவரங்களை தரும்படி டுவிட்டர் நிர்வாக குழுவிடம் எலான் மஸ்க் கோரிக்கை விடுத்தார். ஆனால், இரண்டு மாதங்களாகியும் எலான் மஸ்க் கேட்ட விவரங்களை தர டுவிட்டர் நிறுவனம் மறுத்து வந்தது. இதனை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை கைவிடுவதாக எலான் மஸ்க் கடந்த 9-ம் தேதி அதிரடியாக அறிவித்தார்.

டுவிட்டரை வாங்கும் திட்டத்தை எலான் மஸ்க் கைவிட்ட நிலையில் அவர் மீது டுவிட்டர் நிறுவனம் வழக்குத் தொடர்ந்தது. டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தத்தை எலான் மஸ்க் கட்டாயம் நிறைவு செய்யவேண்டுமென தெரிவித்தது.

இந்த நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் சிக்கலை ஏற்படுத்த முயற்சிப்பதாக எலான் மஸ்க் டுவிட்டர் சிஇஓ பராக் அகர்வாலிடம் தெரிவித்ததாக டுவிட்டர் தாக்கல் செய்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பராக் அகர்வால் மற்றும் டுவிட்டர் நிறுவனத்தின் சிஎப்ஓ நெட் செகல் ஆகியோருக்கு எலான் மஸ்க் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த செய்தியில் “உங்கள் வழக்கறிஞர்கள் இந்த உரையாடல்களைப் பயன்படுத்தி சிக்கலை ஏற்படுத்துகின்றனர். அதை நிறுத்த வேண்டும்” என மஸ்க் குறிப்பிட்டு இருக்கிறார்.