ராஜீவ் காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசி ரவிச்சந்திரனுக்கு 9ஆவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், அருப்புக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன், கடந்த 1992ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு அவரது தந்தை பொய்யாழி இறந்ததையடுத்து, தாயார் ராஜேஸ்வரி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள சூரப்பன் நாயக்கன்பட்டியில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், தனது வேளாண் நிலத்தை பராமரிக்கவும், தனக்கு வலது கண்ணில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவியாக இருக்க தனது மகன் ரவிச்சந்திரனுக்கு விடுப்பு வழங்க கோரி அவரது தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். நீதிமன்றம் அளித்த பரிசீலனையின் அடிப்படையில் தமிழக உள்துறை ரவிச்சந்திரனுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி முதல் 30 நாட்கள் பரோல் வழங்கியது. இதனையடுத்து, மதுரை மத்திய சிறையில் விடுவிக்கப்பட்ட ரவிச்சந்திரன் பலத்த துகாப்புடன் தூத்துக்குடி மாவட்டத்தில் தனது தாயார் வசிக்ககூடிய சூரப்பன் நாயக்கன்பட்டி கிராமத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.

இதனிடையே ரவிசந்திரனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருத்துவ ஓய்வில் உள்ளார். அதேசமயம், நவம்பர் மாதம் முதல் 8 முறை அவருக்கு பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டது. அதன்படி, இன்றுடன் அவரது பரோல் காலம் முடிவடையவுள்ள நிலையில் 9ஆவது முறையாக இன்று முதல் மேலும் ஒரு மாதம் அதாவது வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வரை ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.