பத்திரிகையாளர் கொலைக்கு சவுதி இளவரசர் தான் பொறுப்பு: ஜோ பைடன்!

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலைக்கு சவுதி அரேபிய இளவரசர் தான் பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்

சவுதி அரேபியாவை சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட், வாஷிங்டன் போஸ்ட் உள்ளிட்ட பத்திரிகைகளில் சவுதி அரேபியாவின் மன்னர் மற்றும் இளவரசர்களை குறிப்பாக, பட்டத்துக்கு இளவரசர் முகமது பின் சல்மானை விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தார். இதனால், சவுதி அரேபிய அரசு அவர் மீது கடும் கோபத்தில் இருந்தது. இந்த நிலையில், துருக்கியைச் சேர்ந்த ஹடிஸ் சென்ஜிஸ் என்பவரை ஜமால் கஷோகி திருமணம் செய்யவிருந்த நிலையில், 2018 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். துருக்கியின் இன்ஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்துக்கு ஆவணங்களை பெற சென்றவர் திரும்பி வரவில்லை. தூதரகத்துக்குள்ளேயே அவர் கொலை செய்யப்பட்டு விட்டார் என குற்றம் சாட்டிய துருக்கி அரசு, இது தொடர்பாக சவுதி அரேபியாவை சேர்ந்த 15 பேரின் பெயரை வெளியிட்டது.

ஜமால் கஷோகியை சவுதி அரேபியாதான் கொலை செய்தது. இதன் பின்னணியில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாகவும் குற்றம் சாட்டிய துருக்கி அரசு, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டது. இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்திய அமெரிக்க உளவுத்துறை, ஜமால் கசோகியை உயிருடன் பிடிக்க அல்லது கொல்வதற்கான திட்டத்திற்கு இளவரசர் சல்மான் ஒப்புதல் வழங்கியதாக தெரிவித்தது. உலக நாடுகள் மத்தியில் இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் சவுதி, அமெரிக்க நாடுகளிடையேயான உறவில் விரிசலையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சவுதி அரேபியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜெட்டா நகரில் இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து பேசினார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

ஜமால் கஷோகி கொலை பற்றி நேரடியாகவே பேசி தெளிவுபடுத்திக் கொண்டேன். என்னுடைய பார்வையையும் தெரியப்படுத்தினேன். ஜமால் கஷோகியின் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என இளவரசர் முகமது பின் சல்மான் கூறுகிறார். அவர் அப்படி கூறுவார் என நான் நினைத்திருந்தேன் என அவரிடம் சுட்டி காட்டினேன். உண்மையில் அவர்தான் ஜமால் கஷோகி கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். இதனை அவரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டேன். அமெரிக்க புலானாய்வு துறை செய்த விசாரணையில் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி இளவரசர் சல்மான் தான் உத்தரவிட்டார் என்பதை கண்டறிந்துள்ளது. இதனை கூறுவதால் நான் வருத்தப்படவில்லை. இவ்வாறு ஜோ பைடன் தெரிவித்தார்.

ஆனால், “என் கொலைக்கு நீங்கள் உறுதியளித்த பொறுப்பு இதுதானா? சவுதி அரசு குடும்பத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம் உங்கள் கைகளில் உள்ளது” என்று ஜமால் கஷோகியின் பெயரில் அவரது காதலி ஹடிஸ் சென்ஜிஸ் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.