அணுமின் நிலையத்திலிருந்து ரஷ்யா தாக்குதல்: உக்ரைன் எச்சரிக்கை!

உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலைய வளாகத்தில் ரஷ்யப் படையினர் ஆயுதங்களை குவித்து வைத்துள்ளதோடு, அங்கிருந்து அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால், பதற்றமான சூழ்நிலை நிலவுவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் இணைய முயற்சிக்கும் உக்ரைன் மீது ரஷ்ய படையினர், 143-வது நாளாக தொடர்ந்து தாக்குல் நடத்தி வருகின்றனர். இந்த போரில், ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தி வருகின்றனர். எனினும், இந்த போரில், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

ரஷ்யாவின் நடவடிக்கையைக் கண்டிக்கும் வகையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டும், அதுகுறித்து சிறிதும் கவலைக்கொள்ளாமல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யாவுக்கு மறைமாக பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், தொடர்ந்து ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை அளித்து தங்களது ஆதரவு தெரிவித்து வருகின்றன. தொடர்ந்து ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படையினர், தென் கிழக்கு உக்ரைனில் டினிப்ரோ ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். அங்கு உக்ரைன் ஊழியர்கள் இன்னும் பணியாற்றி வந்தாலும், அணு மின் நிலைய வளாகம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகள் முழுவதும் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டிதான் உள்ளது.

இந்நிலையில், அணு மின் நிலையம் மற்றும் அந்த வளாகம் முழுவதையும் ரஷ்ய படைகள் தங்களது ராணுவ தளமாக பயன்படுத்தி வருகிறது. அங்கு பல்வேறு ஆயுதங்களையும் குவித்துள்ளது. இந்தப் பகுதியில் இருந்தபடி சுற்றி உள்ள பகுதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் அணுசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பயங்கர ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதோடு, 500 ரஷ்ய வீரர்கள் அப்பகுதியில் முகாமிட்டிருப்பதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ரஷ்ய வீரர்கள் அப்பகுதியை விட்டு வெளியேறுவதற்கான போதுமான நடவடிக்கைகள் இல்லாததால், உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே சமமான நிலைப்பாட்டை எடுத்து சர்வதேச அணுமின் நிறுவனம் அரசியல் செய்வதாகவும் உக்ரைன் அணுசக்தி நிறுவனம் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.