உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலி: அமெரிக்கா

உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர் என்று, அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடங்கிய போர் 5-வது மாதத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனை கைப்பற்ற ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்ய தாக்குதலில் உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் உக்ரைன் மீதான போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியானதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் மத்திய உளவுத்துறை ஏஜென்சி இயக்குனர் வில்லியம் பர்னஸ் கூறியதாவது:-

அமெரிக்க உளவுத்துறையின் சமீபத்திய தரவுகளின் படி, உக்ரைன் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 45 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இது ஒரு குறிப்பிடத்தக்க இழப்பாகும். மேலும் உக்ரைனியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ரஷ்ய படைகளுக்கு எதிராக போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அவர் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பேசினார். அவர் கூறும்போது, “துரதிருஷ்டவசமாக போர் முடிவுக்கு வராமல் பயங்கரவாதம் தொடர்கிறது. போரினால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறேன். நான் கேட்க விரும்பாத ஒன்றை கேட்கிறேன். எங்களுக்கு ஆயுதங்கள் தாருங்கள். ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளை தாருங்கள் என்று கேட்கிறேன்” என்று கூறினார். இதையடுத்து உக்ரைனுக்கு அதிக அளவில் துல்லியமான ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.