இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம், மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை அடித்து நொறுக்குவதும், வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பவங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கைகளை அளித்த போதிலும், இதுபோன்ற விரும்ப தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில், நேற்று விசைப் படகுகளில் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். தலைமன்னார், தனுஷ்கோடி இடையே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, ஒரு விசைப் படகை பறிமுதல் செய்தனர். மேலும், 6 மீனவர்களை கைது செய்து மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டு வருகின்றனர். விசைப்படகுடன் ஆறு மீனவர்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்றதால் சக மீனவர்கள் மற்றும் ராமேஸ்வரம் மீனவ மக்களிடையே கொந்தளிப்பை ஏற்பட்டுள்ளது.