ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: தமிழக அரசு பரிசீலிக்க உத்தரவு!

ஸ்டெர்லைட் ஆலையின் கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய விண்ணப்பத்தை தமிழக சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், “தூத்துக்குடி தொழிற்பேட்டையில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டது. மக்களின் போராட்டத்தை தொடர்ந்து 2018 ஏப்ரல் மாதம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால், வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் மூடப்பட்டது. மேலும் தமிழக அரசு ஆணை 72இன் படி வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் முழுவதுமாக மூடப்பட்டது. வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. மின்சாரம் நிறுத்தப்பட்டதன் விளைவாக அவசரகால நிலையைகூட செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. நிறுவனத்தின் உள்ளே ஆசிட், ரசாயனம் மற்றும் ஆபத்தான பல மூலப் பொருள்கள் உள்ளன. அவசர கால நிலைக்கு குறைந்த அளவு மின்சாரம் வழங்கக் கோரி மனு அளித்த நிலையில் அவையும் நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலையின் போது மருத்துவ ஆக்ஸிஜன் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டது. இதற்காக உள்ளூர் உயர்மட்ட குழு அனுமதி பெற்று 250 ஊழியர்கள் வேலை பார்த்தனர். தற்போது ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணையை வெளியேற்றவும் மற்றும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரங்களை சரி செய்ய உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்டது. எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட எண்ணெய், மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதித்து இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதேபோல் தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.

இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழக அரசுக்கு கழிவுகளை அகற்ற அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் விண்ணப்பத்தை தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை செயலர் 3 மாதத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்க வேண்டும். அதே நேரத்தில் வேறு நபர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதனையும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.