அமெரிக்க பூங்காவில் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி!

அமெரிக்காவில் உள்ள பூங்காவில், மர்ம மனிதர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், பூங்கா ஒன்று உள்ளது. நேற்று முன்தினம், இப்பூங்கா அருகே கார் கண்காட்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து, மக்கள் அலறி அடித்து ஓடினர். இது குறித்து, லாஸ் ஏஞ்சல்ஸ் போலீஸ் அதிகாரி கெல்லி முனிஸ் கூறியதாவது:-

பூங்காவில் உள்ள பேஸ்பால் விளையாட்டு திடலில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மர்ம நபர்கள், அங்கிருந்தோரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதில், இருவர் உயிரிழந்தனர்; மூன்று பெண்கள் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.