நெருப்புடன் விளையாடாதீர்கள்: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!

தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, “நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்” என சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகிய இருவரும் நேற்று தொலைபேசி மூலம் பேசினர். சுமார் 2 மணி நேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டு ஆகும் நிலையில், இதுவரை சீன அதிபர் ஷி ஜின்பிங் உடன் ஒரு முறை கூட நேரில் சந்தித்ததில்லை. நான்கு முறையும் தொலைபேசி மூலம் மட்டுமே உரையாடியுள்ள நிலையில், நேற்று ஐந்தாவது முறையாக இரு தலைவர்களும் பேசியுள்ளனர். விரைவில் இரு நாட்டு தலைவர்களும் நேரடி சந்திப்பை மேற்கொள்ள இந்த பேச்சுவார்த்தையின் போது முடிவு செய்துள்ளனர். இந்த பேச்சு வார்த்தையின் போது தைவான் பிராந்தியத்தின் கொள்கை குறித்து இரு நாட்டு தலைவர்களும் முக்கியமாக விவாதித்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சீனா தனது ஆதிக்கத்தை நிறுவத் தொடர்ந்து ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தைவானை சீனாவின் ஒரு அங்கமாகவும், அது தனி பிராந்தியம் இல்லை என்ற நிலைப்பாட்டையும் சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தி உள்ளது. அதேவேளை, தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இது சீனாவை கடும் எரிச்சல் அடைய செய்கிறது. எனவே, அமெரிக்க அதிபர் பைடன் உடனான பேச்சின் போது, தைவான் விவகாரம் குறித்து ஷி ஜின்பிங் சீனாவின் நிலைப்பாட்டை திட்டவட்டமாக கூறியுள்ளார். சீனாவின் ஓர் அங்கம் தான் தைவான். எனவே சீனாவின் இறையாண்மையைச் சீண்டும் செயல்களில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொண்டார்.
தைவான் விவகாரத்தில் அமெரிக்கா நுழைவது நெருப்புடன் விளையாடுவதற்குச் சமம் என, ஷி ஜின்பிங் எச்சரித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக அமெரிக்க நாடாளுமன்ற தலைவர் நான்சி பெலோசி தைவான் செல்ல இருப்பதாக வெளியாகும் தகவல் குறித்து தனது அதிருப்தியை ஜி ஜின்பிங் வெளிக்காட்டியிருக்கிறார். ஒரே சீனா என்ற கொள்கைக்கு அமெரிக்கா கட்டுப்பட வேண்டும் என்றும் தைவானின் சுதந்திரம் மற்றும் வெளிநாடுகளின் தலையீடு எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜின்பிங் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

இரு நாடுகள் இடையே வேறுபாடுகள் இருந்தாலும், பல்வேறு துறைகளில் அமெரிக்கா, சீனா இடையேயான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கு மட்டும் இன்றி உலக அளவில் நன்மை பயக்கும் என்று ஜோ பைடன் இந்த பேச்சுவார்த்தையின் போது குறிப்பிட்டு இருக்கிறார். அதேவேளையில், தைவான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கையில் மாற்றம் இல்லை. என்றும் தெரிவித்துள்ளார். தைவான் விவகாரத்தில் தன்னிச்சையான முயற்சிகளை அமெரிக்கா ஒருபோதும் ஏற்காது. அதை கடுமையாக எதிர்க்கும் என ஜோ பைடன், ஜின்பிங் உடனான உரையாடலின் போது குறிப்பிட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும், இரு தலைவர்களும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் ஒப்புக் கொண்டதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.