அமெரிக்கா நடத்திய தாக்குதலில் அல் கொய்தா தலைவர்அல் ஜவாஹிரி பலி!

அல் கொய்தா இயக்கத் தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய உளவு அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

ஒசாமா பின்லேடனின் மறைவை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டில் இருந்து அல் கொய்தா அமைப்பின் தலைவராக அய்மான் அல் ஜவாஹிரி செயல்பட்டு வந்தார். அதன் பின் 11 ஆண்டுகள் இவர் தான் தலைவராக இருந்தார். அமெரிக்காவில் நடந்த பல்வேறு முக்கியத் தாக்குதல்களுக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் இவரும் ஒருவர். அமெரிக்காவில் நடந்த 2002 கடற்படை தாக்குதலுக்கு பின்பும் அய்மான் அல் ஜவாஹிரி முக்கிய காரணமாக இருந்தார். நேற்று இரவு காபூலில் உள்ள வீட்டில் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்காவின் சிஐஏ எனப்படும் மத்திய உளவு அமைப்பினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பின் அமெரிக்கா நடத்திய பெரிய ட்ரோன் தாக்குதல் இது. அல் ஜவாஹிரி கொலை செய்யப்பட்டுள்ளதை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதிப்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், அல் ஜவாஹிரியை அமெரிக்காவின் மத்திய உளவு அமைப்பினர் எப்படி சுற்றி வளைத்து கொன்றனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. பல ஆண்டுகளாக, அல் ஜவாஹிரியின் நெட்வொர்க் குறித்து மத்திய உளவு அமைப்பினர் விசாரித்து வந்துள்ளனர். இதற்கிடையே, கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அல் கொய்தா அமைப்பின் நடவடிக்கைகளை ரகசியமாக உளவுப் பார்த்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதம், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாதுகாப்பான வீடு ஒன்றில், அல் ஜவாஹிரியின் குடும்ப உறுப்பினர்களை, மத்திய உளவு அமைப்பினர் பார்த்துள்ளனர். மேலும், அதே வீட்டில், அல் ஜவாஹிரி இருப்பதையும் அவர்கள் ஆணித்தரமாக உறுதிப்படுத்தி உள்ளனர். இதை அடுத்து, இந்தத் தகவலை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறினார். தொடர்ந்து, பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அல் ஜவாஹிரி மீது தாக்குல் நடத்துவதற்கான திட்டத்தை, அதிபர் பைடனிடம், மத்திய உளவு அமைப்பினர் விளக்கி உள்ளனர்.

இதற்கிடையே, வீட்டுக்குள்ளே இருந்த அல் ஜவாஹிரி, ஒரு கட்டத்தில், வீட்டின் பால்கனியில் உலாவியதை மத்திய உளவு அமைப்பினர் உறுதிப்படுத்தி உள்ளனர். இதை அடுத்து, அல் ஜவாஹிரி மீது தாக்குதல் நடத்துவதற்கான சூழல் குறித்து, மத்திய உளவு அமைப்பினரிடம், அதிபர் ஜோ பைடன் கேட்டார். மேலும், இந்த ஆப்ரேஷனை வெற்றிகரமாக முடிப்பதற்கு, காலநிலை, ஒளி ஆகியவற்றின் அவசியம் குறித்து கேட்டறிந்தார். அப்போது, அதற்கான திட்டங்களை அதிகாரிகள் அவரிடம் எடுத்துரைத்தனர்.

தொடர்ந்து, கடந்த 25 ஆம் தேதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, அல் ஜவாஹிரியை கொலை செய்தால், அது, அமெரிக்கா – தலிபான் உறவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து கேட்டார். இதன் பின்னர், ஒரு துல்லியமான வடிவமைக்கப்பட்ட வான்வழித் தாக்குதலை நடத்த, மத்திய உளவு அமைப்பினருக்கு அதிபர் பைடன் அனுமதி அளித்தார். இதன்படி, கடந்த 30 ஆம் தேதி இரவு 9:48 மணி அளவில், அல் ஜவாஹிரி இருந்த வீட்டை குறிவைத்து, மத்திய உளவு அமைப்பினர் ட்ரோன் தாக்குதல் நடத்தினர். சக்தி வாய்ந்த ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களில், அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார். இது குறித்து கருத்துத் தெரிவித்த அதிபர் ஜோ பைடன், நீதி வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்து உள்ளார்.