ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது: ஹர்பஜன் சிங்

ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது என்று மாநிலங்களவையில் ஹர்பஜன்சிங் கூறினார்.

தலீபான்கள் ஆளும் ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை சீக்கியர்கள் மற்றும் அவர்களது வழிபாட்டுத்தலங்கள் தாக்கப்பட்டுள்ளன. இதுபற்றிய பிரச்சினையை ஆம் ஆத்மி கட்சி எம்.பி.யான முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மாநிலங்களவையில் நேற்று எழுப்பினார். அப்போது அவர், “ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், குருத்வாராக்கள் மீதான தாக்குதல்கள் பற்றி பேச எழுந்துள்ளேன். இது உலகமெங்கும் வாழ்கிற சீக்கியர்களின் உணர்வுகளை புண்படுத்துகிறது. அது மட்டுமல்லாது, இது சீக்கியர் என்ற அடையாளத்தின் மீதான தாக்குதலும் ஆகும். நாங்கள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறோம்?” என கேள்வி எழுப்பினார். ஆப்கானிஸ்தானில் சீக்கியர்கள், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டி வேதனை தெரிவித்தார்.