மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புகிறது: ரவிக்குமார் எம்.பி.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புவதாக ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு எனும் பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழகம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்துடன், காவிரி மேலாண்மை வாரிய அனுமதி இல்லாமல் மேகேதாட்டுவில் அணை கட்ட முடியாது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவும் இருக்கிறது. ஆனால், மேகேதாட்டுவில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதல் தேவையில்லை எனவும், தமிழக அரசின் கருத்தை கேட்காமலேயே அடுத்த கட்ட ஒப்புதலுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கர்நாடக அரசு கோரி வருகிறது. அதன்படி, கடந்த ஆண்டு கர்நாடக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கக் கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. இதையடுத்து, தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மேகேதாட்டு அனைக்கு எதிராக தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒருமித்தமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், “மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடகாவை அனுமதிப்பதற்கு ஒன்றிய அரசு முடிவு எடுத்திருக்கிறதா? காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் (CWMA) சமீபத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து ஒன்றிய அரசின் நிலைப்பாடு என்ன?” ஆகிய கேள்விகளை விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த நீர் வளத்துறை இணை அமைச்சர் பிஷ்வேஸ்வர் துடு கூறியதாவது:-

மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம், கர்நாடகாவின் சாத்தியக்கூறு அறிக்கை (FR), விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பதற்கான ‘கொள்கை அளவிலான’ அனுமதி பெறுவதற்காக மத்திய நீர் ஆணையத்திடம் (CWC) சமர்ப்பிக்கப்பட்டது. CWC, திட்ட ஆணையத்தால் (கர்நாடக அரசு) டிபிஆர் தயாரிப்பதற்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு ‘கொள்கை அளவிலான’ அனுமதியை வழங்கியது. ‘உச்ச நீதிமன்றத்தால் மாற்றியமைக்கப்பட்ட காவிரி நதிநீர்ப் பிரச்சனை தீர்ப்பாயத்தின் (CWDT) தீர்ப்பை அமல்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருப்பதால், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை (CWMA) ஏற்றுக்கொள்வது இதற்கு ஒரு முன்நிபந்தனையாக இருக்கும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்பிறகு, மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) கர்நாடக அரசால் ஜனவரி 2019 இல் CWC க்கு சமர்ப்பிக்கப்பட்டது. DPR நகல்கள் CWMA க்கு அனுப்பப்பட்டன. CWMA இன் பல்வேறு கூட்டங்களின் போது மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர் திட்டத்தின் DPR மீது விவாதிப்பதற்கு அது நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டது. இருப்பினும், சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையே ஒருமித்த கருத்து இல்லாததால், இந்த நிகழ்ச்சி நிரல் மீதான விவாதம் நடைபெறவில்லை.

பின்னர், 11.02.2022 அன்று நடைபெற்ற CWMAஇன் 15 ஆவது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவைக் கருத்தில் கொண்டு, சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்ட ஆலோசனை பெறப்பட்டு CWMAக்கு தெரிவிக்கப்பட்டது. 22.07.2022 அன்று நடைபெற்ற CWMA இன் 16 ஆவது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு நீர்த்தேக்கம் மற்றும் குடிநீர்த் திட்டம் பற்றிய விவாதம் மீண்டும் சேர்க்கப்பட்டது. ஆனால்,மேகேதாட்டு அணை குறித்த விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் பதிலளித்துள்ளார்.

ஆனால், மேகேதாட்டு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு மழுப்புவதாக ரவிக்குமார் எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மேகேதாட்டுவில் அணைகட்டுவது தொடர்பாக ஒன்றிய அரசின் நிலைபாடு என்ன என்பதை அமைச்சர் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. அமைச்சரின் மழுப்பலான பதில் ஒன்றிய அரசு கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு அளித்துவருகிறது என்ற குற்றச்சாட்டை மெய்ப்பிப்பதாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.