முல்லை பெரியாறு குறித்து அனிமேஷன் வீடியோ: நடவடிக்கை எடுக்க ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை!

முல்லைப் பெரியாறு அணை குறித்து அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் அனிமேஷன் வீடியோ வெளியிட்ட நபர்கள் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார்.

முல்லைப் பெரியாறு அணையில் அதிக நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழகத்தில் கோரிக்கை எழுந்து வரும் நிலையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிட்டது போல அனிமேஷன் வீடியோக்களை கேரளாவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பரப்பி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுரை மாநகராட்சி வரி செலுத்துவோர் சார்பில், தமிழக அரசு அறிவித்துள்ள வீட்டு வரி உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், நிர்வாகிகள் கொடுத்த மனுவினை பெற்றுக்கொண்ட ஆர்.பி.உதயகுமார், அதை சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்து அதை சட்டமன்றத்தில் எடுத்துச் செல்வோம் என்று அவர்களுக்கு உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில், வரி உயர்த்தும் சூழ்நிலை ஏற்பட்டபோது, அதை மக்களிடத்தில் திணிக்க மாட்டேன் என்று கூறினார். ஆனால் தற்போதைய முதலமைச்சர் வரியை உயர்த்த மாட்டேன் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இன்றைக்கு 150 சதவீதம் அளவில் வரியை உயர்த்தி உள்ளனர். தற்போது தமிழகத்தில் 80 லட்சம் வீட்டு வரி செலுத்துவோர் உள்ளனர். இதில் 601 முதல் 1200 சதுர அடி வரை வீடு கட்டிய சாமானிய மக்கள் தான் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு வரியை சுமத்தி கொடுங்கோல் ஆட்சியை திமுக அரசு நடத்தி வருகிறது. மக்களை வாட்டும் வீட்டு வரி உயர்வை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க, அனைத்து மாவட்டங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின் கட்டணம் உயர்வு, சட்டம் ஒழுங்கை சீர்கேட்டினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளை, கிடப்பில் போட்டுவிட்டு தற்போது திராவிட மாடல் என்று கூறிக்கொண்டு, விளம்பர அரசாக செயல்படுகிறது. டிவியை திறந்தால் முதலமைச்சர் முகத்தைத் தான் பார்க்க முடிகிறது. ஆட்சி சக்கரத்தை நடத்தி மக்களுக்கான, திட்டங்களை எதையும் செய்யவில்லை. தற்போது தமிழகத்திற்கு முன்மாதிரியாக வகையில், இந்த வீட்டு வரி உயர்வை திரும்ப பெறக் கோரி மதுரை மாநகரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இங்கு உள்ளவர்கள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு கடிதத்தை அளித்துள்ளார்கள். நிச்சயம் அவர் கவனத்திற்கு இதை கொண்டு செல்வேன். அவர் சட்டமன்றத்தில் உங்கள் கோரிக்கை பற்றி பேசித் தீர்வு காண்பார்.

முல்லை பெரியார் பிரச்சனையில் மாபெரும் சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டவர் ஜெயலலிதா. தற்பொழுது ரூட் கர்வ் விதி என்பதை சுட்டிக்காட்டி, அணை நீர்மட்டத்தை 142 ஆக உயர்த்தாமல், முல்லை பெரியார் மூலம் பத்து மதகுகளில் மூலம் 3000 கன அடிக்கு மேல், கேரளாவுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் மூன்று முறை முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக தேக்கப்பட்டது. இது ஒன்றும் முடியாத காரியம் அல்ல.

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை, கர்நாடக அரசு மதிக்காமல் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தற்போது நமது உரிமையை பறிக்கும் வண்ணம் ரூல் கர்வ் விதியை, தமிழக அரசு கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையென்றால், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் ராஜஸ்தான போல பாலைவனமாக மாறிவிடும். கேரளா அரசின் அழுத்தத்தை தமிழக அரசு நிராகரித்து, ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதார பிறப்பு உரிமையை காப்பாற்றி, அணை நீர்மட்டம்142 அடியாக தேக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

இதுவரை முதலமைச்சர் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. தற்போது கேரளாவில் முல்லைப் பெரியாறு அணை குறித்து, அனிமேஷன் செய்த வீடியோ அச்சம் ஏற்படுத்தும் வகையில், இரு மாநில உறவுகளுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், இந்திய ஒற்றுமைக்கு குந்தகம் விலைவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ பதிவை செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குரிய தண்டனையை வழங்க கேரளா முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோவில் கற்பனையை மிஞ்சும் வகையில், கட்டிடங்கள் எல்லாம் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் என அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் தவறான செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆகவே சமூக வலைதளங்களில் பரவும் இந்த வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் இதுபோன்று முன்பு கேரளாவில் திரைப்பட நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் சில கருத்துக்களை வெளியிட்டார்கள், அப்போது கடுமையாக கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அவர்கள் பின் வாங்கினார்கள்.

தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் முல்லை பெரியார் அணை குறித்து தொடர்ந்து எங்களிடம் கேட்டு வருகிறார். முல்லைப் பெரியாறு அணை குறித்து தமிழக அரசு தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடியார் கவனத்திற்கு கொண்டு சென்று ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.