கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும்: முதலமைச்சர் ஸ்டாலின்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் விதிகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு பதில் கடிதம் எழுதியிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடந்த 5-ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி கடிதம் எழுதியிருந்த நிலையில், இப்போது பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்யும் எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 5-ஆம் தேதி பினராயி விஜயன் தனக்கு எழுதியிருந்த கடிதத்தில் முல்லைப் பெரியாறு அணை குறித்த அவரது கவலைகளை குறிப்பிட்டிருந்ததாக கூறியிருக்கிறார். அணை அனைத்து வகையிலும் பாதுகாப்பானது என்றும், அணையிலிருந்து விதிமுறைகளின் படியே தண்ணீர் திறக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்டாலின். கள அலுவலர்கள் மேலும், வெள்ள ஒழுங்குமுறை நெறிமுறையின் படி, அதிகபட்சமாக வைகைப் படுகையில் தண்ணீரைத் திருப்பிவிடவும், விதி நிலைகள் மற்றும் கேட் செயல்பாட்டு அட்டவணையை கவனமாகப் பின்பற்றவும் கள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரவு 7 மணி நிலவரப்படி நீர்மட்டம் 136 அடியாக இருந்தது என்றும் 4.8.2022 அன்று, எங்கள் கள அலுவலர்கள், 5.8.2022 அன்று ஸ்பில்வே கேட் திறக்கும் சாத்தியம் குறித்து, இரவு 7.40 மணிக்கு கேரளாவில் உள்ள அதிகாரிகளுக்குத் தெரிவித்தனர் எனவும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் இந்த தகவல் இடுக்கி மாவட்ட ஆட்சியர் மற்றும் கேரளாவில் உள்ள மற்ற அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டதாகவும் ஸ்பில்வே ஷட்டர்கள் 5.8.2022 அன்று மதியம் 1.00 மணிக்கு திறக்கப்பட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும் 8.8.2022 காலை 7.00 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 138.85 அடியாகவும், சராசரி நீர்வரத்து 6942 கன அடியாகவும், கசிவுநீர் வெளியேற்றம் சுமார் 5000 கன அடியாகவும் உள்ளது என்றும், இது அங்கீகரிக்கப்பட்ட ரூல் கர்வ் விதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது எனவும் விளக்கி கூறியிருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணையின் கீழ்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அணை நிர்வாகக் குழு மிகுந்த கவனம் செலுத்துவதாகவும், அணையின் பொறுப்பில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், உங்கள் முடிவில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ளவும் போதுமான அளவு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஸ்டாலின் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.