தோழர் ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் தமிழர் விருது வழங்கி கவுரவிப்பு!

10 லட்ச ரூபாய் காசோலை உடன் 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்
சுதந்திர தின விழா மேடையில் நல்லகண்ணுவின் செயலை கண்டு பலரும் வியந்தனர்.

தமிழகத்திற்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மிகப்பெரிய அளவில் பங்காற்றிய தலைவர்களை பெருமைப்படுத்தும் வகையில் “தகைசால் தமிழர்” என்ற பெயரில் புதிய விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவாக்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். ஒவ்வொரு ஆண்டும் தகைசால் தமிழர் விருதுக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 10 லட்ச ரூபாய்க்கான காசோலை, பாராட்டு சான்றிதழ் ஆகியவை சுதந்திர தின விழாவின் போது முதல்வரால் வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டிற்கான தகைசால் தமிழர் விருது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் 75வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து விருதுகளையும், நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஆர்.நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கி முதல்வர் கவுரவித்தார். இதையடுத்து 10 லட்ச ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார். உடனே முதல்வர் அளித்த 10 லட்ச ரூபாய்க்கான காசோலை உடன் தனது பங்கிற்கு 5 ஆயிரம் ரூபாய் சேர்த்து மொத்தம் 10 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவிட்டார். இந்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

எளிய வாழ்க்கை, பொது வாழ்வில் நேர்மை என்ற அடையாளத்திற்கு உரியவர் நல்லகண்ணு. விரைவில் 97வது வயதை எட்டவுள்ளார். இளம் வயதிலேயே சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டதை அடுத்து கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது கம்யூனிஸ்ட் இயக்கம் நல்லகண்ணுவை அரவணைத்துக் கொண்டது. சுதந்திர இந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

நல்லகண்ணுவின் 80வது பிறந்த நாளை ஒட்டி, ஒரு கோடி ரூபாயை வசூலித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அவருக்கு கொடுத்தது. ஆனால் அதை கட்சிக்கே திருப்பி கொடுத்து ஆச்சரியப்படுத்தினார். ஒருமுறை அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அதில் பாதியை கட்சிக்கும், மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்திற்கும் கொடுத்து விட்டார்.

பின்னர் இதுகுறித்து நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறுகையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு இதை கொடுத்து உள்ளேன். நிவாரண நிதிக்கு இது பயன்படட்டும் என்றுதான் கொடுத்து இருக்கிறேன். எனக்கு விருது கிடைத்தது பெரிய மரியாதையாக இருக்கிறது. என்னை அங்கீகரித்த அரசுக்கு பெரிய நன்றி. விருதுக்கு என்னை தேர்வு செய்தவர்களுக்கு நன்றி. மக்கள் பணம் எனக்கு அந்த பணம் வேண்டாம். அந்த காசு மக்களுக்கு பயன்படட்டும். மக்களுக்கு பணம் செல்வதே சரியானதாக இருக்கும். முதல்வரின் நிவாரண நிதிக்கே அந்த பணம் செல்லட்டும் என்று நல்லகண்ணு கூறியுள்ளார்.