10 குழந்தைகள் பெற்றால் ரூ.13 லட்சம் பரிசு: ரஷ்ய அதிபர்

மக்கள் தொகை சரிவை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றால் ரூ.13 லட்சம் பரிசுத்தொகையை ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.

இந்தியாவை விட 5 மடங்கு பரப்பளவு அதிகம் கொண்ட ரஷ்யாவின் மக்கள் தொகை 14 கோடியே 51 லட்சம் தான். ரஷ்யாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைவாக உள்ள சூழலில் கடந்த சில ஆண்டுகளாக குழந்தை பிறப்பு விகிதம் வேகமாக சரிந்து வருகிறது. குறிப்பாக நடப்பாண்டில் மட்டும் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 4 லட்சம் சரிவு கண்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 மடங்கு குறைவு. 2020ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு குறைவு. இதனை கருத்தில் கொண்டு ரஷ்யாவில் 10 மற்றும் அதற்கு மேல் குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெண்களுக்கு ஒரு மில்லியன் ரூபிள் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 13 லட்சம் ரூபாய் பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பரிசு தொகை மட்டுமின்றி மதர் ஹீரோயின் என்ற பட்டமும் வழங்கப்பட்டு, ரஷ்ய கொடி பொருத்திய தங்க பதக்கமும் வழங்கி கவுரவிக்கப்படவுள்ளனர். ரஷ்யாவில் இதுபோன்ற பரிசு அறிவிக்கப்படுவது இது முதல்முறையல்ல.

சோவியத் ரஷ்யாவாக இருந்தபோது இரண்டாம் உலகப்போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளை ஈடுகட்ட 1944ல் அப்போதைய அதிபர் ஜோசப், இதே மதர் ஹீரோயின் பரிசு திட்டத்தை செயல்படுத்தினார். அப்போது 4 லட்சத்துக்கும் அதிகமானோர் இப்பரிசை பெற்றுள்ளார்கள். 1991ல் சோவியத் கூட்டமைப்பு உடைந்த போது நிறுத்தப்பட்ட இப்பரிசு, உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வரும் இவ்வேளையில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியிருப்பதாவது:-

ரஷ்யாவில் மக்கள் தொகை சரிவு ஏற்பட்டு வருகிறது. இதை எதிர்கொள்ள, 10க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றெடுக்கும் ரஷ்ய பெண்களுக்கு 13 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். தங்களின் 10வது குழந்தைக்கு ஒரு வயது நிறைந்தவுடன், குழந்தையின் தாயிடம் வழங்கப்படும். மேற்பட்ட குழந்தைகளைப் பெற்ற பெண்களுக்கான சோவியத் சகாப்த விருது (தாய் நாயகி) என்று அழைக்கப்படுகிறது. இது உக்ரைனில் நடந்த போரினால் ஆழமடைந்துள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை நெருக்கடியை மீட்டெடுப்பதற்கான முயற்சியாகும். இவ்வாறு அவர் கூறினார்.