மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாட்டில் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்தள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூன்றில் இரு பங்குக்கும் கூடுதலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூடுவதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆணையிட்டுள்ளது. இது விவசாயிகளை பாதிக்கும். விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் குறைக்கப்படுவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நெல்லில் பாதிக்கும் குறைவாகத் தான் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் அரசால் கொள்முதல் செய்யப்படுகின்றன. மீதமுள்ள நெல் தனியாரிடம் குறைந்த விலைக்கு விற்கப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றால் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும், மாறாக இருக்கும் கொள்முதல் நிலையங்களையும் மூடக் கூடாது. இதை மனதில் கொண்டு, விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும், பிற மாவட்டங்களிலும் மூடப்பட்ட நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க அரசு ஆணையிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.