சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் பாலியல் வழக்கில் காணாமல் போன முக்கிய ஆவணங்கள்!

சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்டத்தில் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.

தமிழகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொன்டு இருந்தபோது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அப்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுமட்டும் இல்லாமல் பெண் அதிகாரியை புகார் கொடுக்க விடாமல் தடுத்ததாக செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 2021ல் பெண் எஸ்பிக்கு, சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு தொடரப்பட்டது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த இந்த புகாருக்கு தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. விழுப்புரத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த ஓர் ஆண்டாக வழக்கு விசாரணை நடைப்பெற்று வருகிறது.

முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், பெண் எஸ்பிக்கு இடையே நடந்த உரையாடல் பதிவு, வாட்ஸ் அப் மெசேஜ் பதிவு, கால் அழைப்பு பதிவு உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரால் வழங்கப்பட்டிருந்த முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதால் நீதிபதி புஷ்பராணி அதிர்ச்சி அடைந்துள்ளார். காணாமல் போன ஆவணங்களின் மறு நகல் ஆவணங்களை வரும் 25ம் தேதிக்குள் மீண்டும் சமர்ப்பிக்க சிபிசிஐடி போலீசாருக்கு நீதிபதி புஷ்பராணி உத்தரவு பிறப்பித்துள்ளார். வழக்கு ஆவணங்கள் காணாமல் போயிருப்பது பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.