புதுச்சேரி பட்ஜெட்: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்: ரங்கசாமி!

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், மத்திய அரசு பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நீண்ட இழுபறிக்கு பிறகு மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கியது. இன்று காலை 9.45 மணிக்கு பேரவை கூடியதும், 2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்காக ரூபாய் 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து உரையாற்றினார்.

பட்ஜெட் உரையில் பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார் பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

• புதுச்சேரி மாநிலத்தில் கால்நடை மையம் அமைக்கப்படும்.

• காரைக்காலில் வன அறிவியல் மையம் அமைக்கப்படும்.

• பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.802 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். அரசு பள்ளிகளில் பொலிவுறு வகுப்புகள் அமைக்கப்படும். இலவச பாடப்புத்தகங்கள், சீருடை, மதிய உணவு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

• கல்வித்துறையுடன் உள்ள விளையாட்டு இளைஞர் நலன் துறை பிரிவு தனி துறையாக துவங்கபடும்.

• புதுச்சேரியில் தேசிய சட்ட பல்கலை கழகம் துவங்கப்பட உள்ளது. இதற்கான துவங்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

• மின் துறைக்கு 1,596 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

• தீயணைப்பு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பபடும். இந்துறைக்கு ரூபாய் 31.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• புதுச்சேரி கடற்பகுதியில் மிதக்கும் படகு துறை அமைக்கப்படும்.

• காரைக்காலில் அரசு மருத்துமனை துவங்கப்படும்.

• புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோயில்களில் உள்ள சொத்துக்களின் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

• அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ. 2 கோடி வழங்கப்படும்.

• +1,+2 மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு நிறுத்தப்பட்ட மிதிவண்டி மீண்டும் வழங்கப்படும்.

• குடிமை பொருள் வழங்கள் துறை மூலம் நடத்தப்படும். குறைதீர்ப்பு கூட்டங்களுக்கு அதிகளவில் வரவேற்பு உள்ளதால், குறைதீர்ப்பு கூட்டத்தை அதிகளவில் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.

• உர விற்பனை அதிகரிக்க காரைக்காலில் விற்பனை மையங்கள் அதிகரிக்கப்படும், கூட்டுறவு சர்க்கரை ஆலை தனியார் பங்களிப்புடன் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரங்கசாமி தெரிவித்தார்.

• மத்திய அரசு உதவி தொகை 1,729 கோடி ரூபாய் வழங்க உள்ளது. மத்திய அரசின் சாலை நிதியாக 20 கோடி ரூபாய், மத்திய அரசின் கடன் தொகையாக 500 கோடி ரூபாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியில் கடன் திரட்ட 1,889 கோடிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்.

• புதுச்சேரி கடற்கரைக்கு இனப்பெருக்கம் செய்ய வரும் அரிய வகை ஆலீவ் ரெட்லி ஆமைகளை காக்க புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 5 முட்டை பொறிப்பகம் அமைக்கப்படும்.

• மாநிலத்தில் நடமாடும் கால்நடைமையம் அமைக்கப்படும் என்று கூறிய ரங்கசாமி, காரைக்காலில் ஒரு மருத்துவ கல்லூரி துவங்கப்படும், புதிதாக 4 சுகாதார மையங்கள் அமைக்கப்படும்.

• காவல் துறையில் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு துவங்கப்படும். அனைத்து காவல் நிலையங்களில் மகளிர் உதவி மையம் துவங்கப்படும் என்றும் முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

• சென்னை- புதுச்சேரி இடையே பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்

• காரைக்காலில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள், சரக்கு கப்பல் சேவை

• பாரதியார் பல்கலைக்கூடத்தில் ரூ.16.18 கோடி மதிப்பில் தாகூர் கலை பண்பாட்டு வளாகம் நடப்பாண்டில் கட்டி முடிக்கப்படும்.

• வாடகை இடங்களில் செயல்படும் நூலகங்கள் அரசு கட்டிடத்திற்கு மாற்றம் செய்யப்படும் – முதல்வர் ரங்கசாமி.

• வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். அரசின் எந்த உதவித்தொகையும் பெறாத 21 வயது முதல் 57 வயதுக்குட்பட்ட அனைத்து குடும்ப தலைவிக்கு தலா 1000 ரூபாய் மாதம்தோறும் வழங்கப்படும் என்ற அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா.சிவா மற்றும் திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை முதல் பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. வருகிற 30 ஆம் தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.