இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும்: ரிஷி சுனாக்

இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். இந்தியா – பிரிட்டன் இடையே, இரு வழி உறவு ஏற்படுத்தப்படும் என, பிரிட்டனின் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும், ரிஷி சுனாக் உறுதியளித்தார்.

பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி விலகியுள்ளார். அவர் அங்கம் வகிக்கும் பழமைவாத கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுபவரே பிரதமராக முடியும். இதையடுத்து, கட்சித் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இறுதி கட்டத் தேர்தலில், முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனாக், வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் போட்டியிடுகின்றனர். கட்சியின் பிரதிநிதிகள் ஓட்டளித்து, செப்., 5ம் தேதி நடக்கும் தேர்தலில், புதிய தலைவரை தேர்ந்தெடுக்க உள்ளனர். இதையடுத்து, கட்சிப் பிரதிநிதிகளிடம் ஆதரவு கேட்டு பிரசார கூட்டங்கள் நடந்து வருகின்றன.

கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் கூட்டம், லண்டனில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், கட்சி பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு பதிலளித்து, ரிஷி சுனாக் கூறியதாவது:-

இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவு மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டுக்கும் இடையே, நாம் பாலமாக இருந்து வருகின்றோம். இந்தியாவில் நம் பொருட்களை விற்பதற்கு, மிகப் பெரிய வாய்ப்பு உள்ளதை நாம் அறிவோம். இரு நாட்டு உறவில் புதிய மாற்றத்தை உருவாக்க விரும்புகிறேன். இந்தியாவிடம் இருந்து நாம் நிறைய கற்க வேண்டும். இதனால், நம் மாணவர்கள், நம்முடைய நிறுவனங்கள் இந்தியாவுக்கு செல்வதை சுலபமாக்குவேன். ஒரு வழிப் பாதையாக உள்ள உறவை, இரு வழிப் பாதையாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார்.