மாலத்தீவு சுற்றுசூழல் அமைச்சருக்கு கத்திக்குத்து!

மாலத்தீவு தலைநகர் மாலேவில் மக்கள் நடமாட்டம் மிகுந்த நெடுஞ்சாலை ஒன்றில் அந்த நாட்டு அமைச்சர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாலத்தீவின் சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அலி சோலே வழக்கம் போல தனது இருசக்கர வாகனத்தில் அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவரை வழிமறித்த ஒருவர் கத்தியால் தாக்க முற்பட்டார். உடனடியாக சுதாரித்துக்கொண்ட அமைச்சர் தன்னுடைய கைகளை கொண்டு தாக்குதலை தடுக்க முயன்றார். இருந்தபோதும் அவருடைய கழுத்து மற்றும் முகத்தில் குத்தி, அவருக்கு கத்திகுத்து ஏற்பட்டது. வாகனத்தை விட்டுவிட்டு அமைச்சர் அலி தப்பியோடினார்.

தாக்குதல் நடத்தியவரை பொதுமக்கள் பிடிக்க வந்தபோது அவர்களையும் கத்தியால் தாக்க முயற்சித்தால் பதற்றம் ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த மாலத்தீவு காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவரை சுற்றி வளைத்து கைது செய்து இழுத்துச் சென்றனர். தாக்கியவர் யார்? தாக்குதலுக்கான காரணம் என்ன? என்று மாலே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அலி சோலேவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.