நீதிபதிக்கு வேற வேலை இல்லைனு நினைச்சீங்களா?: அதிமுக வழக்கால் நீதிபதி கோபம்!

தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா? என உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுக தொடர்பாக வழக்குத் தொடுத்த மனுதாரர்களுக்கு கோபமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிச்சாமி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளருக்கு மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டும் என தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கில் கடந்த 17ஆம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக்குழு செல்லாது என்றும் ஜூன் 23க்கு முன்னர் இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்த நிலையில், இறுதி விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தல், இரட்டை தலைமை தேர்வு செய்யப்பட்டது, பொதுக்குழு நடத்தப்பட்டது ஆகியவற்றை எதிர்த்து வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் மற்றும் கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதிமுகவில் 2017ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பொதுக்குழுவை எதிர்த்தும், 2021 டிசம்பரில் செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்ததை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ராம்குமார் ஆதித்தன், முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமியின் மகன் சுரேன் பழனிச்சாமி தரப்பு வழக்கறிஞர், ஒரே கோரிக்கையுடன் பல வழக்குகள் தாக்கல் செய்வதை தடுக்கும் வகையில், அதிமுக நிர்வாகம் தொடர்பாக மற்றும் பொதுக்குழு தொடர்பான அனைத்து வழக்குகளையும் அனைத்து வழக்குகளையும் விசாரிக்க சிறப்பு அமர்வை அமைக்க வேண்டும் எனக் கோரி பதிவாளரிடம் கடிதம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் அதிமுக வழக்குகள் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, அதிமுக தொடர்பான வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வு அமைக்கக்கோரி பதிவாளருக்கு கடிதம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடரப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் வேறு நீதிபதியை மாற்ற வேண்டுமென தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுப்பதுதான் வேலையா என்று கோபமாகக் கேள்வி எழுப்பினார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி.

மேலும், உங்கள் மனுவை வேறு நீதிபதிக்கு மாற்றுவதை தவிர தலைமை நீதிபதிக்கு வேறு வேலை இல்லை என நினைக்கிறீர்களா என்றும் மனுதாரர்களுக்கு கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, அதிமுக தொடர்பான வழக்குகளை செப்டம்பர் 9ஆம் தேதி தன் முன் விசாரணைக்கு பட்டியலிட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.

ஏற்கனவே, அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்பது தொடர்பாக தலைமை நீதிபதியிடம் ஓபிஎஸ் தரப்பு முறையிட்டதை, கீழ்த்தரமான செயல் என விமர்சித்திருந்தார் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி. பின்னர், அதற்கு ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு தெரிவித்த நிலையில், மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிடப்பட்டு நீதிபதி மாற்றப்பட்டது. அதன் பிறகுதான் அந்த வழக்கை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார்.