8வது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு, 8வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி வேலுார் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது தாய் பத்மாவுக்கு உடல் நிலை சரியில்லாமலிருந்தது. இதனால் தன்னை கவனித்துக் கொள்ள நளினிக்கு பரோல் வழக்கும்படி தமிழக அரசுக்கு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கோரிக்கையை ஏற்கப்பட்டு, கடந்த டிச., 23 ம் தேதி நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டது.
இதனால் காட்பாடி பிரம்மபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தாய் பத்மாவுடன் தங்கியிருந்தார்.

கடந்த சில மாதங்களாக பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நளினி இன்று(ஆக.,25) சிறைக்கு திரும்ப வேண்டியதிருந்தது. ஆனால் பத்மா கோரிக்கை ஏற்கப்பட்டு எட்டாவது முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் செப்., 24 ம் தேதி நளினி சிறைக்கு திரும்ப வேண்டும் என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.