பாசி நிதி நிறுவனம் மோசடி வழக்கில் இருவருக்கு 27 ஆண்டு சிறை!

‛பாசி’ நிதி நிறுவனம் மூலம் ரூ.930 கோடி மோசடி செய்த வழக்கில் இருவருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.171.74 கோடி அபராதமும் விதித்து கோவை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருப்பூரில், கடந்த 2011ல் செயல்பட்டு வந்த ‘பாசி டிரேடிங் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ என்ற ஆன்லைன் நிதிநிறுவனம் அதிக வட்டி தருவதாக பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தனர். ஆனால், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றினர். சி.பி.ஐ., விசாரிக்கையில், 58,571 பேரிடம், 930 கோடி ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது. நிறுவன இயக்குனர்கள் மோகன்ராஜ், இவரது தந்தை கதிரவன், கமலவள்ளி ஆகியோர், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.

கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலன் பாதுகாப்பு (டான்பிட்) சிறப்பு கோர்ட்டில், 2013 பிப்., 27ல், இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக சாட்சி விசாரணை நடந்து வந்தது. இரு தரப்பு வாதம் முடிந்ததை தொடர்ந்து, தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட இருந்தது. இதற்கிடையில், டெபாசிட்தாரர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயாராக இருப்பதால், தீர்ப்பளிக்க தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், மோகன்ராஜ் மனு தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து, வழக்கில் தீர்ப்பு கூற இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சி.பி.ஐ., தரப்பில் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இரு தரப்பு மனுக்களை விசாரித்த நீதிமன்றம், இடைக்கால தடையை நீக்கியதோடு, கோவை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, கோவை டான்பிட் கோர்ட் நீதிபதி ரவி இன்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், ‛மோகன்ராஜ் மற்றும் கமலவள்ளி ஆகிய இருவருக்கும் 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், 171 கோடியே 74 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. மொத்தம் 1,402 பேரின் சாட்சி விசாரணை மட்டுமே கோர்ட்டில் சமர்பிக்கப்பட்டது. எனவே, இந்த அபராத தொகையை சாட்சி விசாரணை அளித்தவர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். மொத்தம் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் 930 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஆனால், சரியாக விசாரணை செய்யாமல், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிபிஐ விசாரிக்கவில்லை. எனவே, தற்போது சாட்சி விசாரணை அளித்த 1,402 பேரை தவிர்த்து மற்றவர்கள் புகார் கொடுக்க வரும் பட்சத்தில் அதனை மறுக்காமல் சிபிஐ விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான மோகன்ராஜின் தந்தை கதிரவன் சென்ற ஆண்டு கோவிட் காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.