ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதல்முறையாக ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த இந்தியா!

உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவுக்கு எதிராக இந்திய ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதன் முறையாக வாக்களித்துள்ளது.

நேடோ கூட்டமைப்பில் உக்ரைன் சேர கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24 தேதி முதல் அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சீனா ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகித்து வந்தது.

இந்நிலையில், ஐ.நா.பாதுகாப்பு சபையில் முதல் முறையாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி காணொளி கட்சி வாயிலாக உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டதை எதிர்த்து ரஷ்யா தீர்மானம் கொண்டுவந்தது. அதற்கு எதிராக இந்தியா வாக்களித்துள்ளது. இது தொடர்பாக எழுதப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி ரஷ்யாவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி உரையாற்றவே ஆதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.